சபாநாயகர் நாற்காலியில் சத்யபாமா....பாராட்டைப் பெற்ற தவெக அரசு!
இன்று நடைபெற்ற சட்டபேரவையில் சபாநாயகர், துணை சபாநாயகர் இல்லாத சமயத்தில், மாற்று சட்டமன்றத் தலைவராக தவெகவின் எம்எல்ஏ சத்யபாமா நியமிக்கப்பட்டதற்கு, அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் பாராட்டுகளை தெரிவித்தனர்.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் வழக்கமாகவே சட்டசபை நிகழ்வுகளை எல்லாம் சபாநாயகர் வழிநடத்துவார். அவர் இல்லாத போது துணை சபாநாயகர் வழிநடத்துவார். அவையில் இந்த இருவரும் இல்லாத சமயத்தில் மாற்று தலைவர்கள் குழு அமைக்கப்படுவது வழக்கமான ஒன்று.
அப்படி மாற்று பேரவை தலைவர்கள் பட்டியலை ஏற்கனவே சபாநாயகர் அறிவித்திருந்த நிலையில், இதில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த திருப்பூர் வடக்கு தொகுதி பெண் எம்எல்ஏ சத்யபாமா உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்நிலையில் இன்று சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று கொண்டிருந்த போது, சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகிய இருவரும் இல்லாத சமயத்தில் மாற்று தலைவர் அவையை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், மாற்று தலைவராக தவெக எம்எல்ஏ சத்யபாமா சபாநாயகர் நாற்காலியில் சென்று அமர்ந்தார்.
பின்னர் அவர் சட்டசபை விவாதங்களை நடுநிலையோடு திறம்பட அவையை தொடர்ந்து வழிநடத்தினார். தவெக கட்சியின் சார்பில் பெண் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்தியது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்ததுள்ளது.
மேலும் சத்யபாமா அவையை நடத்தி கொண்டிருந்தபோது, விவாதத்தில் குறுக்கிட்டு பேசிய அமைச்சர் ஒருவர், அவரை தவறுதலாக "துணை பேரவை தலைவர்" என குறிப்பிட்டு பேசினார். உடனே அவையில் இருந்த உறுப்பினர்கள், "அவர் துணை பேரவை தலைவர் இல்லை, மாற்று பேரவை தலைவர்" என்று சுட்டிக்காட்டி சரிசெய்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் கலகலப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்து மிகவும் பொறுமையாகவும் கம்பீரமாகவும் அவையை வழிநடத்திய தவெக பெண் எம்எல்ஏ சத்யபாமாவின் செயல்பாட்டை திமுகவை சேர்ந்த தங்கம் தென்னரசு பேசும் போது, "லேடி வெல்லிங்டன் இந்த சட்டப்பேரவைக்கு வழங்கிய ஆசனத்தில் ஒரு பெண்மணி பேரவை தலைவராக அமர வேண்டும் என்பது நீண்ட காலமாக எல்லோரிடத்திலும் இருக்கும் எதிர்பார்ப்பு.
இன்றைக்கு மாற்று தலைவராக நீங்கள் அந்த இருக்கையில் அமர்ந்திருப்பதை பார்க்கும்போது உள்ளபடியே பேரவை உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்" என்றார். பல்வேறு கட்சி மக்கள் பிரதிநிதிகளும் மனதார பாராட்டினர்.
மாற்று பேரவை தலைவர்கள் குழுவில் சத்யபாமாவுடன் சேர்த்து, தவெகவை சேர்ந்த விஜய் சரவணன், மதார் பதுருதீன் ஆகியோரும், திமுக தரப்பில் காதர் பாட்சா முத்துராமலிங்கம், அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தாரகை கத்பர்ட் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?