ஜார்ஜ் கோட்டைக்கு Bye Bye... சென்னையில் புதிய தலைமைச் செயலகம்... மாஸ் காட்டிய விஜய்..!

சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் சட்டசபையில் அறிவித்துள்ளது பெரும் கவனத்தை பெற்றுள்ளது. 

Sep 3, 2026 - 13:00
ஜார்ஜ் கோட்டைக்கு Bye Bye... சென்னையில் புதிய தலைமைச் செயலகம்... மாஸ் காட்டிய விஜய்..!

தமிழ்நாடு சட்டசபை இன்று (செப்.,03) காலை 9.30 மணிக்கு கூடியது. சட்டசபையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார். அதன் ஒரு பகுதியாக, சென்னையில் அனைத்து அரசுத் துறைகளும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

தற்போது தலைமைச் செயலகத்தின் நிர்வாகப் பணிகள் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் நாமக்கல் கவிஞர் மாளிகை ஆகிய இரு வளாகங்களில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக நாமக்கல் கவிஞர் மாளிகையில் 30-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகள் செயல்பட்டு வருகின்றன.

காலப்போக்கில் அரசுத் துறைகள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தற்போதைய கட்டமைப்பில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, நவீன வசதிகளுடன் உலகத்தரத்தில் ஒருங்கிணைந்த தலைமைச் செயலகத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, சுமார் 20 லட்சம் சதுரடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட உள்ளது. அனைத்து அரசுத் துறைகளும் ஒரே வளாகத்தில் இயங்கும் வகையில் இந்த கட்டடம் வடிவமைக்கப்படும்.

புதிய வளாகத்தில் நவீன அலுவலக வசதிகள் மட்டுமின்றி, போதுமான வாகன நிறுத்துமிடங்கள், மாநாட்டு அரங்குகள், பொதுமக்களுக்கான சேவை மையங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்குத் தேவையான நவீன வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.

இதனிடையே, புனித ஜார்ஜ் கோட்டை வரலாற்றுச் சிறப்பு மிக்க நினைவுச் சின்னமாக இருப்பதால், அதன் வரலாற்றுத் தன்மையை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். தொல்லியல் மற்றும் பாதுகாப்புத் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள கோட்டையில், தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் வசதிகள் உள்ளிட்ட மேம்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், பசுமைக் கட்டட தரநிலைகளைப் பின்பற்றும் வகையில் நவீன நிர்வாக வளாகமாக புனித ஜார்ஜ் கோட்டை மேம்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, நீண்டகால நிர்வாகத் தேவைகளை கருத்தில் கொண்ட முக்கியமான முடிவாக பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow