80ஸ் ஸ்டார்ஸ் ரீயூனியன்: அறுபடாத அன்புச் சங்கிலி!
80ஸ் நட்சத்திரங்கள் ஆண்டுதோறும் ரீயூனியன் நடத்துவது உண்டு. அந்த வகையில், இந்த ஆண்டு சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனைவரும் ஒன்றுசேர்ந்து கொண்டாடி இருக்கிறார்கள்.

80ஸ் ஸ்டார்ஸ் ரீயூனியன்: அறுபடாத அன்புச் சங்கிலி!
- இளையரவி
பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் சந்திப்பு மாதிரி 1980கள் மற்றும் 90களில் திரையுலகை கலக்கிய நட்சத்திரங்கள் சென்னையில் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். எண்பதுகளுக்கு முன்னாலும் இப்படி ஒன்று இல்லை; பின்னாலும் இதுபோல் இல்லை என்பதுபோல் இவர்கள் மட்டும் தங்களின் நட்பு சங்கிலி அறுந்து விடாமல் பாதுகாத்து வருவது ஆச்சர்யம்தான்!
இந்த முறை இந்த சந்திப்பு ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீபிரியா இல்லத்தில் நடைபெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரைத்துறைகளைச் சேர்ந்த சிரஞ்சீவி, வெங்கடேஷ், ஜாக்கி ஷெராஃப், சரத்குமார், ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீப்ரியா, நதியா, ராதா, சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், ஜெயசுதா, சுமலதா, ரஹ்மான், குஷ்பு, பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், லிஸ்ஸி, நரேஷ், சுரேஷ், ஷோபனா, மேனகா, ரேவதி, பிரபு, ஜெயராம், அஸ்வதி ஜெயராம், சரிதா, பானு சந்தர், மீனா, லதா, ஸ்வப்னா, ஜெயஸ்ரீ என 31 நட்சத்திரங்கள் பங்கேற்றேனர்.
கனமழை காரணமாக கடந்த ஆண்டு இந்த நிகழ்வு நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு ‘80ஸ் ஸ்டார்ஸ் ரீயூனியன்’ நடந்தேறியது. ஆர்ப்பாட்ட கொண்டாட்டமாக இல்லாமல் அன்பின் வெளிப்பாடாக இந்த நிகழ்வு நடைபெற்றது.
சென்னையில் ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீபிரியா தம்பதியரின் இல்லத்தில் அக்டோபர் 4 மாலை நடைபெற்ற இந்நிகழ்வை லிஸ்ஸி லட்சுமி, பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பு மற்றும் சுஹாசினி மணிரத்னம் ஒருங்கிணைத்திருந்தனர்.
அன்பு, நட்பு, மற்றும் ஒற்றுமை நிறைந்த இந்த சங்கமத்தில் கலந்துகொண்டவர்கள் தங்கள் நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர். மாலையில் தொடங்கிய ரீயூனியன் காலை வரை நடைபெற்றது. பின்னர் அனைவரும் அடுத்த வருடம் ஒன்று கூடுவோம் எனும் உறுதியோடும் நீங்கா நினைவுகளோடும் விடைபெற்றனர்.
இது குறித்து பேசிய ஏற்பாட்டளர்கள் சுஹாசினி மணிரத்னம் மற்றும் லிஸ்ஸி லட்சுமி, "இந்த நிகழ்வை ஒருங்கிணைத்ததில் பெரும் மகிழ்ச்சி. எங்களுக்கிடையேயான நட்பு, அன்பு மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இந்த சங்கமம் அமைந்தது" என்றனர்.
What's Your Reaction?






