பாசத்திற்குரிய சீமான்... மதிப்பிற்குரிய எதிர்க்கட்சி தலைவர்... வாழ்த்து செய்தியில் முதல்வரை மறந்த விஜய்!

கள்ளக்குறிச்சி உயிரிழப்பு விவகாரம் காரணமாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதனால் அவரது பெயரையும், மற்ற திமுக தலைவர்களின் பெயர்களையும் விஜய் குறிப்பிடவில்லை.

Jun 24, 2024 - 18:27
பாசத்திற்குரிய சீமான்... மதிப்பிற்குரிய எதிர்க்கட்சி தலைவர்... வாழ்த்து செய்தியில் முதல்வரை மறந்த விஜய்!
நடிகர் விஜய்

சென்னை: தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த 22ம் தேதி தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய்க்கு பிறந்த நாளாகும். ஆனால் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 57 பேர் உயிரிழந்த்தால் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு, தவெக தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கு பதிலாக கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும்படி ரசிகர்களுக்கு விஜய் அறிவுரை கூறியிருந்தார்.

நடிகர் விஜய்க்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் சீமான், விசிக பொதுச்செயலாளர் திருமாவளவன், மநீம தலைவர் கமல்ஹாசன் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது பிறந்த நாளை முன்னிட்டு தொலைபேசி வாயிலாகவும், சமூக ஊடகத் தளங்கள் வாயிலாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக புதுச்சேரி மாநில முதலமைச்சர் என்.ரங்கசாமி, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மதிப்பிற்குரிய ஒ. பன்னீர்செல்வம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் முன்னாள் ஆளுநர் மதிப்பிற்குரிய தமிழிசை சௌந்தரராஜன், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர், பாசத்திற்கும் மதிப்பிற்கும் உரிய செந்தமிழன் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர், அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தொல். திருமாவளவன். பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய டாக்டர் அன்புமணி இராமதாஸ்,

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய  டி.டி.வி. தினகரன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய கமல்ஹாசன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் மதிப்பிற்குரிய ஜான் பாண்டியன், எஸ்.டி.பி.ஐ கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய நெல்லை முபாரக், சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான மதிப்பிற்குரிய கு. செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர், மதிப்பிற்குரிய கே.அண்ணாமலை, முன்னாள் அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய எஸ். திருநாவுக்கரசர், முன்னாள் அமைச்சர் மதிப்பிற்குரிய டி.ஜெயக்குமார்,

முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர். மதிப்பிற்குரிய எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர். சட்டமன்ற உறுப்பினர். மதிப்பிற்குரிய திரு. சி.விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய  வானதி சீனிவாசன், நாடாளுமன்ற உறுப்பினர். மதிப்பிற்குரிய விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய தாரகை கத்பட், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய ஒ.பி.ரவீந்திரநாத் மற்றும் என்றும் எனது நெஞ்சிற்கினிய கலைத்துறை சார்ந்த அனைத்து ஆளுமைகள், வழிகாட்டிகள், நண்பர்கள், சகோதர-சகோதரிகள். ஊடக நிறுவனங்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து நிர்வாகிகள், என் நெஞ்சில் குடியிருக்கும் கழகத் தோழர்கள், உலகெங்கும் உள்ள என் உயிரினும் மேலான கோடானு கோடி சொந்தங்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன். என்று கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி உயிரிழப்பு விவகாரம் காரணமாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதனால் அவரது பெயரையும், மற்ற திமுக தலைவர்களின் பெயர்களையும் விஜய் குறிப்பிடவில்லை. கள்ளக்குறிச்சி உயிரிழப்புழப்புக்கு திமுக அரசின் அலட்சியபோக்கே காரணம் என விஜய் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய் தனது அறிக்கையில் சீமான், திருமாவளவன், அன்புமணி இராமதாஸ், கமல்ஹாசன் ஆகியோரை அன்பிற்கும் மதிப்பிற்கும் என ஸ்பெஷலாக கூறியுள்ளார். மற்ற தலைவர்களுக்கு மரியாதைக்குரிய என சாதாரணமாக கூறியுள்ளார். இதனால் விஜய்யின் இந்த நன்றி அறிக்கை சமூக வலைத்தளத்தில் பேசும் பொருளாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow