நாகை அருகே கரை ஒதுங்கிய அமெரிக்க ராக்கெட் லாஞ்சர்; போலீசார் தீவிர விசாரணை
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த பிரதாமராமபுரம் கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கி உள்ளது. அதனைக் கண்டு சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை வேளாங்கண்ணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பிரதாபராமபுரம் கடற்கரைக்கு வந்த வேளாங்கண்ணி டிஎஸ்பி நிக்ஸன் தலைமையிலான போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், கடற்கரை ஓரம் நீளமாக கிடந்த அப்பொருளை கைப்பற்றி சோதனை மேற்கொண்டனர்.
இதில் நான்கு அடி நீளமும் இரண்டு பைப் இணைப்புடன் கடலில் மிதந்து வந்து கரை ஒதுங்கி இருந்த மர்ம பொருளானது, வெடி மருந்து இன்றி செயலிழந்த ராக்கெட் லாஞ்சர் என்பதும், அதில் மேட் இன் யுஎஸ்ஏ என பெயிண்டால் முத்திரை பதிக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் ராக்கெட் லாஞ்சரின் உள்ளே மீதம் ஏதாவது வெடி மருந்துகள் உள்ளதா? என சோதனை மேற்கொண்டனர்.அதனை தொடர்ந்து கடலில் இருந்து மிதந்து கரை ஒதுங்கி இருந்த அமெரிக்கா ராக்கெட் லாஞ்சரை கைப்பற்றிய போலீசார், அதனை ஆய்வுக்காக நாகப்பட்டினம் எஸ்பி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
அமெரிக்க ராக்கெட் லாஞ்சர் வேளாங்கண்ணி அருகே கடற்கரையில் கரை ஒதுங்கி கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?

