சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு விறுவிறு : 1 மணி வரை 56.81 சதவிகிதம் வாக்கு பதிவு
தமிழகத்தில் சட்டமன்ற வாக்குபதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி 56.81 சதவிகதம் பேர் வாக்களித்தாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 2.80 கோடி, பெண் வாக்காளர்கள் 2.93 கோடி, மூன்றாம் பாலினத்தவர்கள் 7,728 பேர். முதல் முறை வாக்காளர்கள், 14.5 லட்சம் பேர்.
மாநிலம் முழுவதும், 33,133 இடங்களில், 75,064 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 1.06 லட்சம் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் களத்தில், 234 தொகுதிகளில், 4,023 வேட்பாளர்கள் உள்ளனர்.
தி.மு.க., - அ.தி.மு.க., - த.வெ.க., - நாம் தமிழர் கட்சி என, நான்கு முனை போட்டி உருவாகியுள்ளது. காங்கிரஸ், தே.மு.தி.க., வி.சி.க., உள்ளிட்ட, 22 கட்சிகளுடன் இணைந்து, தி.மு.க., மெகா கூட்டணியை அமைத்துள்ளது. பா.ஜ., - பா.ம.க., - அ.ம.மு.க., உள்ளிட்ட 12 கட்சிகளை இணைத்து, அ.தி.மு.க.,வும் பலமான கூட்டணியை அமைத்துள்ளது.
9 மணி 17.69 சதவீதம் வாக்குப்பதிவு
காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 17.69 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் 14.84 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நெல்லையில் 15.96 சதவீதமும், நாகை மாவட்டத்தில் 17.51 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் சுமார் 13.80 சதவீத வாக்குகள் பதிவானது. தற்போது 17.69 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
11 மணி 37.56 சதவிகிதம் வாக்குப் பதிவு
காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வமாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். தமிழகம் முழுவதும் காலை 11 மணி நிலவரப்படி 37.56% ஓட்டுப்பதிவாகி உள்ளது. அதேபோல், ராணிப்பேட்டையில் 38.69%, திருநெல்வேலியில் 32.95%, நாகையில் 37.56%, திருச்சியில் 37.99% ஓட்டுகள் பதிவாகி இருக்கிறது.
மதியம் 1 நிலவரப்படி 56.81 சதவிகிதம் வாக்கு பதிவு
மண்டல வாரியான நிலவரப்படி, மதியம் 1 மணி வரை அதிகபட்சமாகத் திருப்பூர் மாவட்டத்தில் 62.97% வாக்குகள் பதிவாகி முதலிடத்தில் உள்ளது. குறைந்தபட்சமாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் 50.35% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது இதே 1 மணி நிலவரப்படி 40.08% வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்த நிலையில், இந்த முறை 56.81 சதவிகித வாக்குகள் என சுமார் 16.73% கூடுதல் வாக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?