ரூ 82 லட்சம் சொத்து வரி பாக்கி, ஜெயலலிதா வீட்டிற்கு மாநகராட்சி சீல் 

ஹைதராபாத்தில் உள்ள தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்குச் சொந்தமான வீட்டை, சொத்து வரி நிலுவை காரணமாகப் பெருநகர ஹைதராபாத் மாநகராட்சி (GHMC) அதிகாரிகள் நேற்று (திங்கட்கிழமை) சீல் வைத்துள்ளனர். இது அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Mar 31, 2026 - 11:02
ரூ 82 லட்சம் சொத்து வரி பாக்கி, ஜெயலலிதா வீட்டிற்கு மாநகராட்சி சீல் 
ஜெயலலிதா வீட்டிற்கு மாநகராட்சி சீல் 

ஹைதராபாத் ஸ்ரீநகர் காலனியில் உள்ள ஜெயலலிதாவிற்குச் சொந்தமான நான்கு மாடி கட்டிடம் (G+4), நீண்ட நாட்களாகச் சொத்து வரி செலுத்தப்படாததால் அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டு முதல் இதற்கான வரி நிலுவையில் உள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டிடத்திற்கு 2017 முதல் வரி செலுத்தாததால், கடந்த பிப்ரவரி மாதம் மாநகராட்சி துணை ஆணையர் சுரேஷ், ஜெயலலிதாவின் வாரிசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். ஆனால், அதற்கு எவ்வித பதிலும் வராத நிலையில், நேற்று அதிகாரிகள் அந்த கட்டிடத்திற்குச் சென்று சீல் வைத்தனர்.

மாநகராட்சியின் ஒருமுறை தீர்வு திட்டத்தின் (OTS) கீழ் மார்ச் 31-ஆம் தேதி வரை சலுகை வழங்கப்பட்ட பின்னரும், சுமார் ரூ. 82,91,822 வரி நிலுவையில் உள்ளது. இந்தக் கட்டிடம் முன்பு வணிக ரீதியாகப் பயன்படுத்தப்பட்டதால் அதிக வரி விதிக்கப்பட்டது. 

ஆனால், 2017 முதல் இது குடியிருப்புப் பகுதியாக மாற்றப்பட்டதால், வரியைக் குறைக்க வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஜெயகுமார் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதாவின் வீடு சீல் வைக்கப்பட்டு இருக்கும் சம்பவம் அதிமுக தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow