அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல்  நீட்டிப்பு

அமலாக்கத்துறை தரப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அனைத்து ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Nov 22, 2023 - 15:53
Nov 22, 2023 - 19:23
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல்  நீட்டிப்பு

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை டிசம்பர் 4ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்த (2023) ஜூன் 14ம் தேதி அதிகாலை 4 மணியளவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

அவருக்கு எதிராக ஆகஸ்ட் 12 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை, அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர். 

வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதை அடுத்து, அவரது  நீதிமன்ற காவலை செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டது. 

இந்த நிலையில், செந்தில் பாலாஜி மீதான வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் வழக்கு மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.இதனிடையே கடந்த செப்டம்பர் 20ம் தேதி ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 29, அக்டோபர் 13, நவம்பர் 03, நவம்பர் 06 என இதுவரை 10 முறை நீட்டிப்பட்டது.இந்நிலையில், நீதிமன்ற காவல் முடிந்த செந்தில் பாலாஜி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். 

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், அமலாக்கத்துறை தரப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அனைத்து ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி, வழக்கு விசாரணையை டிசம்பர் 4ம் தேதி ஒத்திவைத்தார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow