சட்டசபையில் தண்ணீர் பாட்டில் வேண்டும்: பிரேமலதா,ஓ.பன்னீர்செல்வம் பேச்சால் சிரிப்பலை
சட்டசபையில் உறுப்பினர்களுக்கு தண்ணீர் பாட்டில் வைக்க வேண்டும் என பிரேமலதா பேசியதற்கு ஓ.பன்னீர்செல்வம் கூறியதால் சிரிப்பலை ஏற்பட்டது.
சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில்: ஆளுநர் அர்லேகர் வாசித்த 37 நிமிட உரையில் 37 உச்சரிப்பு பிழைகள் இருந்தது. பிரேமலதாவின் உரையை இடைமறித்த சபாநாயகர்,"வேறு மொழியை தாய் மொழியாக கொண்ட ஆளுநர் அர்லேகரை தமிழை சரியாக உச்சரிக்கவில்லை என விமர்சிக்கக்கூடாது" என பேசினார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்: "வேறு மாநிலத்தை சேர்ந்த ஆளுநர் நமது தலைவர்களின் பெயர்களை உச்சரிப்பதையே நாம் பாராட்ட வேண்டும். தமிழை கற்க நமது ஆளுநர் ஆசைப்படுகிறார் என்பது நான் அவரை சந்தித்தபோது அறிந்தேன். உரையில் எந்த தலைவர் பெயரையும் தவிர்க்காமல் ஆளுநர் படித்ததே பாராட்டுக்கு உரியது. ஆளுநர் அர்லேகர் அன்றைய சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திக்கொடுத்தார், அவரை நாம் பாராட்ட வேண்டும்" என்றார்.
இதை தொடர்ந்து பேசிய பிரேமலதா: சட்டசபையில் எம்எல்ஏ.,க்களுக்கு டம்ளரில் தண்ணீர் கொடுக்கின்றனர். அதனால் அந்த ஊழியர்களுக்கு நிறைய வேலை செய்ய வேண்டியதாக இருக்கிறது. அதற்கு பதிலாக பாட்டிலில் தண்ணீர் வைத்து விட்டால் சுலபமாக இருக்கும். கண்ணாடி பாட்டில்களில் தண்ணீர் வைத்து விடலாம் என்பது எனது கருத்து, என்றார்.
அப்போது குறுக்கிட்ட முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், ''அப்படி தண்ணீர் பாட்டில்களை கொடுத்தால் வீசி எறிய வாய்ப்புள்ளது; அப்படி தர வேண்டாம்'' என்றார். அதற்கு தங்கம் தென்னரசு, ஓபிஎஸ் கூறியது அவருடைய தனிப்பட்ட அனுபவமா என்று அறிய விரும்புகிறேன் என்றார்.
இதனால் சபையில் சிரிப்பலை ஏற்பட்டது. தொடர்ந்து பேசிய பிரேமலதா, தூக்கி எறிய வேண்டும் என முடிவெடுத்து விட்டால் டம்ளரை கூட தூக்கி அடிப்பார்கள். காவேரி தண்ணீராக இருந்தாலும், டாஸ்மாக் தண்ணீராக இருந்தாலும், அவையில் குடிக்க தண்ணீர் கேட்டாலும் தண்ணீர் என்றாலே பிரச்னை தான் போல, என பிரேமலதா விஜயகாந்த் பேசியபோது இன்னும் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
What's Your Reaction?













