மேகதாது அணை விவகாரம்: திமுக தவெக சட்டசபையில் காரசார விவாதம்
மேகதாது அணை தொடர்பாக சட்டசபையில் திமுக, தவெக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இதற்கு தவெக அமைச்சர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
மேகதாது அணை திட்டத்தை தொடர்பாக திமுக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பேசுகையில்: நடுவர் மன்றம் அமைப்பதை சிலர் தவறு என்று கூறுகின்றனர். காவிரி பிரச்சனையில் இந்த அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது. மேகதாது தொடர்பான தீர்மான நகல் அன்றைய தினமே பிரதமருக்கு அனுப்பப்பட்டது. டெல்லி பசுமை தீர்ப்பாயத்தில் மேகதாது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது
மேகதாது விவகாரத்தில் கைகளை கட்டி கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது. மேகதாது விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைவதால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாது. காவிரி நதிநீர் விவகாரத்தில் நமது உரிமை மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் தமிழக அரசு எந்தவித சமரசமும் செய்யாது .
மேகதாதுவில் அணை கட்டுவதை முறியடிப்பதன் மூலம் தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் அரசு உறுதியுடன் செயல்படும். மேகதாது தொடர்பாக நிபுணர்கள் அடங்கிய மத்திய நீர் ஆணையம் மட்டுமே முந்தைய தீர்ப்புகளின் இணக்கத்தை தீர்மானிக்க முடியும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய்யின் அறிவுறுத்தலின்படி விரிவான சட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. என்றார்.
இதை தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா: ”குடிநீர் பங்கீடுக்காக காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட்டு வருகிறது. குடிநீர் தேவைக்காக என்று சொல்லி புதிய அணையை கட்ட முயற்சி செய்கிறது. குடிநீருக்காக புதிய அணையை கட்டினால் சட்ட சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேகதாது அணையை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை கொடுக்கச்சொல்லி கர்நாடக அரசுக்கு ஆதரவாக மேலாண்மை ஆணையம் செயல்பட்டு வருகிறது. கர்நாடகாவுக்கு ஆதரவாக மேலாண்மை ஆணையம் செயல்பட்டு வருகிறது.
காவிரி மேலாண்மை ஆணையம் மீது நம்பிக்கையை இழந்துவிட்டோம்.சட்ட வல்லுநகள் கூறியபடியே புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என கோருகிறோம். குடிநீர் பங்கீடுக்காக மேலாண்மை ஆணையம் செயல்பட்டு வருகிறது. அணை கட்ட வேண்டும் என்றால் புதிய நடுவர் மன்றம் தேவை. கர்நாடக அரசின் வியூகத்துக்கு எதிராக தமிழக அரசின் வியூகமே புதிய நடுவர் மன்றம். புதிய ஆணையம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தால் நமக்கு போதிய கால அவகாசம் கிடக்கும்.” இவ்வாறு அவர் கூறினார்.
What's Your Reaction?













