ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 173’ படப்பிடிப்பு தொடக்கம்
ஜெயிலர் 2 படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் 173வது படத்தை இயக்குனர் அர்ஷத் மாரிமுத்து இயக்க உள்ளார். அர்ஷத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
கமல்ஹாசன் தயாரிக்க, ரஜினிகாந்த் நடிக்க, சுந்தர் சி இயக்கப் போவதாக ரஜினியின் 173வது பட அறிவிப்பை சில மகிழ்ச்சியான புகைப்படங்களுடன் கடந்த வருடம் நவம்பர் 5ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்கள். ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை, அடுத்த ஒரு வாரத்தில் அந்தப் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார் சுந்தர் சி.
அதன்பின் அப்படத்திற்காக சில இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகின. கடந்த சில வருடங்களில் குறிப்பிடும்படியான படங்களைக் கொடுத்த இயக்குனர்கள் அவர்கள். "பார்க்கிங்" பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன், "டிராகன்" பட இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து, "மகாராஜா" பட இயக்குனர் நித்திலன் சாமிநாதன் ஆகியோர் ரஜினிக்காக கதை எழுதினார்கள். அவர்கள் சொல்லிய கதைகளில் அஷ்வத் மாரிமுத்துவின் கதையை ரஜினி தேர்வு செய்தார்.
'தலைவர் 173 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு தொடங்கியுள்ளது. முதற்கட்ட படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்காத நிலையில் பிற நடிகர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும், மேலும் ரஜினிகாந்த் இணையும் முதல் நாளே, மாஸான ஓப்பனிங் பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.
தலைவர் 173 திரைபடத்தில் பிரபல இயக்குநர் ஷங்கர் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், மலையாள நடிகர் பாசில் ஜோசப் ரஜினிகாந்தின் மகனாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரஜினிகாந்தை மையமாகக் கொண்ட சிறப்பு அதிரடி பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
What's Your Reaction?













