ஆளுநர் உரை எதிர்பார்த்த எதுவும் இல்லை : எதிர்கட்சி தலைவர்கள் விமர்சனம்
சட்டசபையில் இன்று ஆளுநர் உரை நிகழ்த்தி இருந்தார். இந்த உரையில் எதிர்பார்த்த எதுவும் இல்லை என எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி: கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 175 பாலியல் வன்கொடுமைகள், 65 கொலைகள், 4 ஆணவப் படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. வேலியே பயிரை மேய்ந்த கதையாக, ஆளுங்கட்சியினரே குற்றச்சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.பேரிடர் காலங்களில் உணவுப் பொருள்கள், பெட்ரோல் - டீசல் உள்ளிட்ட பொருள்களை வாங்குவதுபோல, ஆட்சி அமைந்த நாள் முதல் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து முதலமைச்சர் PANIC BUYING (பீதி காரணமாக வாங்குவது) செய்து வருகிறார்.
'நான் முதல்வன்' திட்டம் என்பது நல்ல திட்டம். அது ஸ்டாலின் பெயரிலோ கலைஞர் பெயரிலோ இருக்கும் திட்டம் கிடையாது. ஆனால், 'நான் முதல்வன்' என்று சொன்னாலே முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற பெயர்தான் ஞாபகத்திற்கு வரும் என்ற குறுகிய எண்ணத்தோடு திட்டத்தின் பெயரை மாற்றி எக்ஸ் தளத்தில் சாதனை பதிவுகளை நீக்கியுள்ளனர்" என்று பேசியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளான போதைப்பொருள் ஒழிக்கப்படும், பெண்களுக்கு முழுப் பாதுகாப்பு வழங்கப்படும், சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்றெல்லாம் முதல்வர் விஜய் தெரிவித்திருந்தார்.
ஆனால், தற்போது அன்றாடம் நிகழும் சம்பவங்கள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன. இதுவரை, சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. போதைப்பொருள் தடுப்புக்கு தனிக்குழு அமைக்கப்பட்ட பிறகுதான், முன்பை விட போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை அதிகாகியுள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இவை மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றன.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: இதுகுறித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், "இன்றைய ஆளுநரின் உரை ஆளுங்கட்சி தரப்புக்கு ஆதரவாக இருந்தது. தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டதை நாம் வரவேற்போம். அதில் தவறு ஒன்றும் இல்லை. ஆளும் தரப்புக்கு ஆதரவாக இருந்தது ஆளுநர் உரை".
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் : கொத்துக் கொத்தாக அரங்கேறும் கொலை, கொள்ளைச் சம்பவங்களும், நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களுமே தவெகவின் கடந்த ஒரு மாத கால ஆட்சியின் அடையாளமாக மாறியிருக்கும் நிலையில், "பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதும், அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதுமே இந்த அரசின் லட்சியம்" என ஆளுநர் உரையில் குறிப்பிட்டிருப்பது கேலிக்கூத்தானது.
What's Your Reaction?













