சுட்டெரிக்கும் வெயிலில் ஹாப்பி நியூஸ்: அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வேளையில், அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டு இருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சுட்டெரிக்கும் வெயிலில் ஹாப்பி நியூஸ்: அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி
அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிக்கையில், “சுமார் 0.9 கிமீ உயரத்தில், தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை, தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

இதன்காரணமாக இன்று (1-05-2026) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

நாளை (2-05-2026) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், இன்று (1-05-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40-41° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி அரபிக்கடலில் மே 2-ம் வாரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow