ஹீட் ஸ்ட்ரோக் அறிகுறிகள்.. கோடை நோய்களில் இருந்து தப்பிக்க சித்த மருத்துவர் ஒய்.ஆர். மானெக்‌ஷா கூறும் டிப்ஸ்

வெப்ப அலை வீசி வருவதால் பலரும் வெப்ப மயக்கம், வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். கோடை காலத்தில் பல நோய்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். கோடை கால நோய்களில் இருந்து மக்கள் தப்பிக்க நமது குமுதம் வாசகர்களுக்காக சித்த மருத்துவர் ஒய்.ஆர். மானெக்‌ஷா கூறியுள்ள பலன் தரும் டிப்ஸ்.

Apr 29, 2024 - 07:49
ஹீட் ஸ்ட்ரோக் அறிகுறிகள்.. கோடை நோய்களில் இருந்து தப்பிக்க சித்த மருத்துவர் ஒய்.ஆர். மானெக்‌ஷா கூறும் டிப்ஸ்


சமீப காலமாக மழை பெய்தாலும் மக்கள் பாதிக்கும் வண்ணமாக ஒரு வருடத்திற்கான மழை ஒரே நாளில் பேய் மழையாக பெய்கிறது,அதே போன்று கோடை கால வெயில் என்றாலும் உடம்பை சுட்டெரிக்கும் வண்ணமாக அடிக்கிறது. காலநிலை மாற்றத்தாலும்,மழை தரும் மரங்கள் வேகமாக குறைந்து வருவதாலும் இவ்வாறு நிகழ்கிறது. 

மழையோ,வெயிலோ இரண்டுமே நம்மை  அச்சுறுத்தும் வகையில் உள்ளது. முன்பெல்லாம் கோடை வெயில் வந்தாலே உற்சாகமாக இருக்கும், அப்போது தான் பள்ளிகளுக்கு விடுமுறை,  விருந்தினர் வீட்டுக்கு செல்வதும்,வித விதமான விளையாட்டுகள் விளையாடுவதுமாக கோடை வெயில் இனிதே கழிந்து விடும். ஆனால் இப்போதெல்லாம் சூரியக் கதிர்கள் தீக்கதிர்கள் போல் உடலை சுட்டெரிக்கின்றது. வெப்ப அலை வீசுவதால் வீட்டை விட்டு வெளியே செல்லவே பலரும் அச்சப்படுகின்றனர். காரணம் ஹீட் ஸ்ட்ரோக், வெப்ப மயக்கம், கோடைகால நோய்கள் குறித்த அச்சம்தான்.

வெப்ப அலை: கோடை வெயில் 104 பாரன்ஹீட்டிற்கு மேல் போகும் போது வெப்ப அலை வீசும், இதனால் உடலுக்கு களைப்பு, சோர்வு, தசைப்பிடிப்பு, தலைவலி ஏற்படும், இந்த நேரங்களில் வெளியே செல்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும், அத்தியாவசிய விசயங்களுக்கு வெளியே செல்வதாக இருந்தால் காட்டன், கதர் உடைகளை அணிய வேண்டும்,இள நிறங்களாலான குடை கொண்டு செல்ல வேண்டும், தண்ணீர் பாட்டில் கையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

வெப்ப பக்கவாதம்:-இது வெப்ப அலை வீசும் இடங்களில் பணி புரிபவர்கள் மற்றும் அதிக நேரம் வெயிலில் நடப்பவர்களுக்கு ஏற்படுகிறது. வெப்ப பக்கவாதம் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவரை காற்றோட்டமான நிழல் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும், தண்ணீர் தெளித்து உடல் வெப்பத்தை குளிர்விக்க வேண்டும். உடனே மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்க வேண்டும். வயதானவர்கள், நாட்பட்ட நோய் உள்ளவர்கள்,கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் வெயில் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். கைக்குழந்தைகளுக்கு ஈரத்துணி அல்லது ஸ்பாஞ்ச் வைத்து உடலை துடைத்து விட வேண்டும்.

வியர்க்குரு: கோடை காலத்தில் பெரும்பாலோனோர் வியர்குரு பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள். இது   வியர்வை சுரப்பியில் இருந்து தோலின் மேற்பரப்பிற்கு செல்லும் குழாய் தடுக்கப்படும் போது அல்லது வீக்கமடையும் போது  உருவாகிறது. இதனால் தோலின் மேற்பரப்பில் உள்ள வியர்வை துளை வியர்வை குழாயின் திறப்பைத் தடுக்கிறது.

வெப்பத்தால் வரும் வியர்வை ஆவியாவதற்குப் பதிலாக,  தோலின் அடியில் சிக்கி, சருமத்தில் எரிச்சல் மற்றும் புடைப்புகளை ஏற்படுத்துகிறது.இதன் வெளிப்பாடால் அரிப்பு, தோல் சிகப்பு இவை ஏற்படுகிறது. வியர்க்குருவுக்கு ஏராளமான பாட்டி வைத்தியங்கள் உள்ளன இதில், சந்தனம் மிகச்சிறந்த நிவாரணி. கலப்படமில்லாத  சந்தனத்தை தண்ணீர் விட்டு அரைத்து உடல் முழுவதும் பூசிக் குளிக்கலாம். 

வியர்க்குருவைப் போக்க சந்தனத்துடன் மஞ்சள்,வேப்பிலை சேர்த்துத் தடவலாம். சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்,மஞ்சளும் வேப்பிலையும் சிறந்த கிருமி நாசினி என்பதால், வியர்க்குருவை கட்டுப்படுத்துவதோடு தோல் அரிப்பையும் குணப்படுத்தும். வியர்க்குரு உள்ள பகுதிகளில்,நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் அறுகன் தைலம் அல்லது குப்பை மேனி தைலத்தை, பூசலாம். உடலுக்கு தேய்த்து குளிக்க ஆவாரம்பூ,பாசிப் பயறு, கருஞ்சீரகம், வெந்தயம்,வெட்டி வேர் கலந்த பொடியை பயன் படுத்தலாம். சோற்றுக் கற்றாழையின் உள் பகுதியை எடுத்து  தேய்த்துக் குளித்தால், வியர்வை பிரச்னை நீங்கும்.

தேமல் மற்றும் படர்தாமரை: தோலில் வியர்வை மூலம் எப்போதும் ஈரம் இருப்பதால் டீனியா வகை பூஞ்சைகள் உடலில் தேமல் , படர்தாமரையை ஏற்படுத்துகிறது. இது தோல் அரிப்பு,சொறிந்தால் எரிச்சல் இவற்றுடன் அந்த இடத்தில் கருப்பு அல்லது சிகப்பு நிற படைகளை ஏற்படுத்துகிறது. இது ஒருவரிடத்தில் இருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவி விடும். இதற்கு சீமை அகத்தி என்னும் வண்டுக்கொல்லி செடியின் இலையை, எலுமிச்சை பழச்சாற்றில் அரைத்து எடுத்த சாறுடன், தேங்காய் எண்ணெய் கலந்து தேமல், படர்தாமரை மீது போட்டு வர முற்றிலும் மறைந்து விடும், அல்லது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் சீமை அகத்தி களிம்பை பயன்படுத்தி வர தீரும்.

தாகம், நீரிழப்பு: கோடை வெயில் பாதிப்பிலிருந்து உடலின் வெப்பத்தை சீராக வைத்திருக்க தோல் ஏராளமான வியர்வையை வெளியேற்றுகிறது, இதனால் தாகம், நா வறட்சி, நீரிழப்பு இவை ஏற்படுகிறது, இதற்கு உடனடியாக தண்ணீர் குடிக்க வேண்டும், தண்ணீரில் வெட்டி வேரை ஊற வைத்து குடித்தால் நாவறட்சி, தாகம் நீங்கும்.நீரிழப்பால் ஏற்படும்  உப்புச்சத்து குறைவுக்கு, மோரில் உப்பு சேர்த்து குடிக்கலாம். ஓ.ஆர்.எஸ் கரைசலுடன் தண்ணீர் கலந்து குடிக்கலாம். நன்னாரி எலுமிச்சை பழ சர்பத் குடிக்கலாம், சீரகத்தை தண்ணீரில் போட்டு காய்ச்சி ஆறவைத்த தண்ணீர் குடிக்கலாம்.

கோடை காலத்தில் நாம் குடிக்கும் தண்ணீரில் அதிகளவு வியர்வையாக வெளியேறுவதால் அதற்கு ஏற்ப தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். சிறுநீர் கடுப்பு, எரிச்சல், குறைந்த அளவில் சிறுநீர் வெளியேறுவது போன்ற நோய்கள் வெயில் காலத்தில் பலரையும் பாதிக்கும்.  இளநீர், பதநீர், நுங்கு, வெண்பூசணி ஜீஸ், சோற்றுக்கற்றாழை ஜீஸ், தர்பூசணி ஜீஸ், முலாம் பழ ஜீஸ் இவற்றை குடிக்க வேண்டும். மோரில் சப்ஜா விதையை சேர்த்து குடிக்கலாம். பானகம் கலந்து குடிக்கலாம்.

பானகம்:  புளி சிறிதளவு, எலுமிச்சை பழம் -2, வெல்லம் -தேவையான அளவு, ஏலக்காய் பொடி, சுக்கு பொடி -சிறிதளவு உப்பு சிறிதளவு செய்முறை: புளியுடன் வெல்லத்தை கரைத்து, எலுமிச்சை பழச்சாறு, ஏலக்காய் பொடி, சுக்கு பொடி, உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். இதை வெயில் காலத்தில் குடித்து வந்தால் தாகம், நாவறட்சி, சிறுநீர் கடுப்பு, எரிச்சல் இவை நீங்கும், உடலில் நீர் சத்து குறையாதவாறு பார்த்து கொள்ளும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow