சட்டவிரோத லாட்டரி விற்பனை படுஜோர்: வீடியோவோடு காவல்நிலையத்தில் புகார் அளித்த தவெக
பூந்தமல்லி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லாட்டரி விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது. கள்ள லாட்டரி விற்பனை தொடர்பான வீடியோ ஆதாரத்துடன் தவெக நிர்வாகி காவல்நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
சென்னையை அடுத்த பூந்தமல்லி பகுதியில் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை ஜோராக நடைபெறுவது தொடர்பான வீடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பூந்தமல்லியைச் சேர்ந்த தவெக நிர்வாகியான செந்தில் நாதன் என்பவர் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், பூந்தமல்லி பெருமாள் கோவில் தெரு பின்புறம் கவரை தெருவில் ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை சட்ட விரோதமாக நடந்து வருகிறது. இதில் சுமார் 8 பேர் நடத்துவதாக தெரிகிறது. ஏழை மற்றும் உழைக்கும் மக்கள் அதிகம் வசிக்கும் அந்த பகுதியில் இது போன்று சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை நடத்தி அவர்களின் வாழ்க்கையை சீரழித்து வருவதாக புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும் சட்டவிரோதமாக நடத்தப்படும் இந்த லாட்டரி விற்பனையை அந்த வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு 5 பேர் வருபவர்களை அழைத்து உள்ளே செல்கின்றனர். காவல் நிலையம் அருகில் தான் இது நடந்து வருகிறது. காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் புகாரில் தெரிவித்துள்ளார். "காவல் நிலையம் அருகிலேயே நடப்பது குறித்து வீடியோவாக புகார் அளித்தும் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சட்டவிரோத லாட்டரி கும்பல் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும்" புகார் கொடுத்துள்ள தவெக மாவட்ட நிர்வாகி செந்தில் நாதன் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?

