ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம்.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு.. எப்போது இருந்து தெரியுமா?

Apr 29, 2024 - 18:49
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம்.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு.. எப்போது இருந்து தெரியுமா?

ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7-ம் தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் காணொலி வாயிலாக ஆஜராகினர். 

வழக்கு விசாரணையில், ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்ய உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அரசு தாக்கல் செய்த அறிக்கையில், ஊட்டிக்கு தினமும் 1,300 வேன்கள் உட்பட 20,000 வாகனங்கள் செல்வதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "இத்தனை வாகனங்கள் சென்றால் நிலைமை மோசமாகும். உள்ளூர் மக்கள் நடமாட இயலாத சூழல்  ஏற்படும். சுற்றுச்சூழலும், விலங்குகளும் பாதிக்கப்படும். எனவே ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் வரை இடைக்கால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தனர். 

அதன்படி, கொரோனா காலத்தில் பின்பற்றப்பட்ட இ-பாஸ் வழங்கும் நடைமுறையை ஊட்டி, கொடைக்கானலில் மே 7-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை அமல்படுத்த வேண்டும் என நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இ-பாஸ் வழங்கும் முன்பு என்ன மாதிரியான வாகனம், எத்தனை பேர் வருகின்றனர், ஒரு நாள் சுற்றுலாவா? அல்லது தொடர்ந்து தங்குவார்களா என்பன உள்ளிட்ட விவரங்களைப் பெற வேண்டும் எனவும்  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், இ-பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டும் அனுமதியளிக்க வேண்டும் எனவும் உள்ளூர் மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். 

இ-பாஸ் நடைமுறை குறித்து இந்திய அளவில் விரிவான விளம்பரங்களை கொடுக்க வேண்டும் எனவும், இ-பாஸ் வழங்குவதற்கு தேவையான தகவல் தொழில்நுட்ப உதவிகளை வழங்க வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow