பெரம்பூர் ரயில் நிலையத்தில் பகீர், சூட்கேசில் ஆண் சடலம்: பயணிகள் அலறல்
பெரம்பூர் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த சூட்கேசில் தலை இல்லாத ஆண் சடலம் அழுகிய நிலையில் போலீசார் மீட்டெடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலை இல்லாத சடலத்தை கண்டு பயணிகள் அச்சம் அடைந்தனர்.
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் இன்று காலை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரயில் நிலையம் 4 வது நடைமேடை படிக்கட்டில் நீல நிற சூட் கேஸ் ஒன்று கேட்பாரற்று கிடப்பதை போலீசார் பார்த்துள்ளனர்.
உடனே போலீசார் அந்த சூட்கேசில் சந்தேகம் படும்படியான பொருட்கள் ஏதேனும் உள்ளதா என்பதற்காக சூட்கேஸ்சை திறந்து பார்த்த போது அதில் தலை இல்லாமல் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் போலீசார் சூட்கேசில் நிர்வாணமாக கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இது குறித்து ஓட்டேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் ஓட்டேரி போலீசார் மற்றும் உதவி ஆணையர் ரமேஷ்பாபு தலைமையிலான காவலர்கள் விரைந்து சென்று உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக தலை இல்லாத முண்டத்தை சூட்கேசில் அடைத்து கொண்டு வந்து ரயில் நிலையத்தில் வைத்து சென்ற நபர் யார்? கொலையுண்ட ஆண் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி சம்பவ இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சூட்கேசை கொண்டு வந்த நபரை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
பட்டபகலில் பரபரப்பாக இயங்கும் பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேசில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?