ரகசிய பேச்சுவார்த்தை , தவெக தாவ அடுத்த அதிமுக டீம் ரெடி! தடுக்க முடியாமல் திணறும் எடப்பாடி
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னர் அதிமுகவினர் தவெக தாவுவது வாடிக்கையாகிவிட்டது. 10 மாவட்ட செயலாளர்கள் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் என்ன செய்வது என தெரியாமல் எடப்பாடி திகைத்து வருகிறார்.
சமீபகாலமாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் விஜய் தலைமையிலான தவெகவில் இணைந்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, தற்போது தென் மாவட்டங்களைச் சேர்ந்த 10 அதிமுக மாவட்டச் செயலாளர்கள் தவெக தலைமையுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கூட்டியுள்ளன.
கட்சியை விட்டு முக்கிய முகங்கள் வெளியேறுவதை எடப்பாடி பழனிசாமி உன்னிப்பாகக் கவனித்து வந்தாலும், "செல்பவர்கள் செல்லட்டும், இருப்பவர்களை வைத்தே கட்சியை வலுப்படுத்தலாம்" என்ற மனநிலையில் அவர் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். எனினும், தொடர் கட்சித் தாவல்கள் அவரை அப்செட் செய்துள்ளதாம்.
தற்போது தவெக தனது கட்சியை அமைப்பு ரீதியாக விரிவுபடுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியையும் தனித்தனியாக நிர்வகிக்கும் புதிய கட்டமைப்பை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதில் மாவட்டப் பொறுப்புகள் மற்றும் அடுத்த தேர்தல் வேட்பாளர் வாய்ப்புகளை எதிர்பார்த்தே அதிமுக நிர்வாகிகள் தவெகவை நாடி வருகின்றனர். அதேநேரம், தவெகவில் இணையும் முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்குத் தேர்தல் வாய்ப்பு வழங்கப்படலாம், ஆனால் உடனடியாக முக்கியக் கட்சிப் பதவிகளோ அல்லது அமைச்சர் பதவிகளோ வழங்கப்படாது என்ற நிபந்தனையைத் தவெக தலைமை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நிர்வாகிகள் வெளியேறினாலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் 47 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஒரு கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளதால் அதிமுகவின் அடிப்படை வாக்கு வங்கி பலமாகவே உள்ளது. எனவே, நிர்வாகிகள் மாற்றத்தால் மட்டுமே கட்சி பலவீனமடைந்துவிடாது என்று ஒருதரப்பினர் கூறினாலும், இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளித்து உட்கட்சி மோதல்களைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அதிமுக தலைமை உள்ளது.
What's Your Reaction?