ஸ்ரெஸ்தா திட்டம்.. கல்வி உதவித் தொகை.. விண்ணப்பிக்க அவகாசம் கோரி ஹைகோர்ட்டில் வழக்கு

பட்டியல் வகுப்பு மாணவர்களின் உயர்கல்வி படிப்பிற்காக ஸ்ரெஸ்தா உதவித்தொகை திட்டத்திற்கான தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Apr 17, 2024 - 16:54
ஸ்ரெஸ்தா திட்டம்.. கல்வி உதவித் தொகை.. விண்ணப்பிக்க அவகாசம் கோரி ஹைகோர்ட்டில் வழக்கு

மதுரையைச் சேர்ந்த கயல்விழி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், ஆதிதிராவிடர் , பட்டியல்  சமுதாயத்தை சேர்ந்த  மாணவர்களின் முன்னேற்றத்துக்காகவும், அவர்களுக்கு உயர் கல்வி  வழங்கும் நோக்கத்திலும் மத்திய அரசு ஸ்ரெஸ்தா திட்டத்தை  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தியது. 

இதற்காக ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் தகுதித்தேர்வை நடத்தி, மாணவர்களை தேர்ந்தெடுக்கின்றனர். இந்த திட்டத்தின்கீழ், என் மகன் செர்ணேந்திர சோழன், தனது 9 ஆம்  வகுப்புக்கான தேர்வை 2022-ம் ஆண்டில் எழுதி, தேசிய அளவில் 324-வது இடத்தை பிடித்து, மத்திய அரசின் உதவித்தொகையை பெற்றிருந்தார்.

இந்தநிலையில் அவர் கடந்த மாதம் 11-ந்தேதி தனது 10-ம் வகுப்பு தேர்வை எழுதி முடித்தார். இதனால் பிளஸ்-1 வகுப்புக்கான ஸ்ரெஸ்தா உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தயாராக இருந்தோம். விசாரித்தபோது, வேறொரு இணையதள முகவரியில் கடந்த மார்ச் மாதம் 12-ந்தேதியே அறிவிப்பு வெளியிட்டு, விண்ணப்பிக்கும் தேதி  முடிந்துவிட்டது என்பது தெரிந்தது. வருகிற 24-ந்தேதி தேர்வு நடக்கும் என அறிவித்துள்ளனர்.

ஆண்டுதோறும் மே மாதத்தில்தான் இந்த தேர்வு அறிவிப்பு வெளியாகும். வழக்கத்துக்கு மாறாக, இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே அறிவிப்பு வெளியிட்டது சட்டவிரோதம். இதனால் எங்களை போல ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே ஸ்ரெஸ்தா கல்வி திட்டத்திற்கான தகுதித்தேர்வு அறிவிப்பை ரத்து செய்துவிட்டு, மே மாதத்தில் வழக்கம் போல புதிதாக அறிவிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு  விசாரணைக்கு வந்தது. விசாரனை செய்த நீதிபதி மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்குவது குறித்து  மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow