அரசு பள்ளிகளில் ரீலிஸ் பெயரில் தவெக அட்ராசிட்டி: தினகரன், அண்ணாமலை கண்டனம்
அரசு பள்ளிகளில் ஆய்வு என்ற பெயரில் ரீலிஸ் எடுக்கும் தவெக நிர்வாகிகளின் அட்ராசிட்டிக்கு டிடிவி தினகரன், அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் : திருவாரூர் மாவட்டம் குன்னலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தவெக நிர்வாகிகள் திடீரென புகுந்து ஆய்வு, இடும்பாவனம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தவெக நிர்வாகி ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே அரசுப் பள்ளி வகுப்பறையில் முதலமைச்சர் படத்தை வைத்து தவெக நிர்வாகிகள் ரீல்ஸ் என நாளுக்குநாள் தொடரும் தவெகவினரின் அத்துமீறலுக்கு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் எப்போது முற்றுப்புள்ளி வைக்க போகிறார் என காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
தவெக ஆட்சிக்கு வந்தவுடனே அம்மா உணவகங்கள், அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறி நுழைந்த தவெக நிர்வாகிகள் மீது இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்காததன் விளைவே தற்போது அரசுப் பள்ளிகளுக்குள் புகுந்து பாடமெடுப்பது போல ரீல்ஸ் எடுப்பது, பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு பள்ளி வளாகத்தைப் பயன்படுத்தும் அளவிற்கான அவலநிலையை உருவாக்கியுள்ளது. என தனது அறிக்கையில் கண்டித்துள்ளார்.
'வீ தி லீடர்ஸ்' நிறுவனர் அண்ணாமலை : கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு சரியான கட்டிடங்கள் கூட இல்லாமல் தரமிழந்து போய்விட்ட நிலையில், தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு அவற்றின் பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி முன்னால் இருக்கிறது.ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன.
ஆளுங்கட்சியினர் என்பதற்காக, அரசுப் பள்ளிகளில் சென்று, வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை, முதல்வர் விஜயே ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று நம்புகிறோம்.மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி முதல்வரையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
What's Your Reaction?













