பிரதமரை தாக்க தமிழக காங்., பெண் எம்பிக்கள் சதி: சபாநாயகர் குற்றச்சாட்டு
நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு, பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டதாகச் சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ள புகார் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
சீன எல்லைப் பிரச்சினை குறித்துப் பேச ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், கடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்றம் முடங்கியது. இன்றும் காலை முதல் அடுத்தடுத்து அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மதியம் 2 மணிக்கு அவை மீண்டும் கூடியது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளி மற்றும் முழக்கங்களுக்கு மத்தியிலேயே, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி பதிலளிக்காமலேயே, குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானத்தைச் சபாநாயகர் நிறைவேற்றினார்.
நேற்று மாலை 5 மணிக்குத் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலளித்துப் பேசவிருந்தார். ஆனால், அவர் நேற்று அவைக்கு வரவில்லை. இது குறித்து இன்று விளக்கம் அளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, "நேற்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி பேச இருந்தார். ஆனால் அவர் நேற்று அவைக்கு வரவில்லை.மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளுங்கட்சி மூத்த அமைச்சர்கள் மேஜைக்கு அருகே சென்று ஆர்பாட்டம் நடத்தினர். அவர்கள் பிரதமர் மோடியை தாக்க சதி திட்டம் தீட்டினர்.
தமிழக காங்., பெண் எம்.பிக்கள் ஜோதிமணி, சுதா உள்ளிட்டோர் பிரதமரை குறி வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டனர். மக்களவை வரலாற்றில் இதுவரை இல்லாத சம்பவத்திற்கு திட்டமிட்டனர். எனவே நான்தான் அவைக்கு வர வேண்டாம் என பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன். சபாநாயகரின் இந்த கருத்து எதிர்க்கட்சியினரை மேலும் கொதிப்படையச் செய்துள்ளது.
சபாநாயகரின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள எதிர்க்கட்சிகள், பிரதமர் பதிலளிக்க அஞ்சி ஓடிவிட்டதாகவும், அதனை மறைக்கவே சபாநாயகர் இத்தகைய கற்பனையான குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
சபாநாயகரின் குற்றச்சாட்டு அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி, சுதா ஆகியோர் சபாநாயகர் கூறியது கட்டுக்கதை என தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?

