அமளி துமளியான சட்டசபை.. சபாநாயகர் சமாதானம்.. ஏற்க மறுத்த எடப்பாடி பழனிச்சாமி.. வெளிநடப்பு
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் 3வது நாள் அமர்வு தொடங்கியதுமே அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் இன்றும் சட்டசபையில் அனலை கிளப்பியது.
![அமளி துமளியான சட்டசபை.. சபாநாயகர் சமாதானம்.. ஏற்க மறுத்த எடப்பாடி பழனிச்சாமி.. வெளிநடப்பு](https://kumudam.com/uploads/images/202406/image_870x_66765273a17b4.jpg)
சென்னை:கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும் என கடும் அமளியில் ஈடுபட்டனர். கேள்வி நேரம் முடிந்த பின்னர் பேசுவதற்கு வாய்ப்பு தருகிறேன் என்று சபாநாயகர் அப்பாவு சமாதானம் செய்தும் அதை ஏற்க மறுத்த அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
கள்ளக்குறிச்சியில் கடந்த 19ஆம் தேதி விஷ சாராயம் குடித்தவர்கள் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சட்டசபையில் இந்த விவகாரத்தை கையில் எடுத்து அதிமுகவினர் அனலை கிளப்பி வருகின்றனர். நேற்றைய தினம் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதம் நடைபெற்றது. எதிர்கட்சி எம்எல்ஏக்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர்.
தமிழ்நாடு சட்டசபை இன்று 3வது நாளாக இன்று கூடியது. அப்போது கருப்பு சட்டையுடன் பேரவைக்கு வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் இரண்டாவது நாளாக அமளியில் ஈடுபட்டனர். கேள்வி நேரத்தை தள்ளிவைத்து விட்டு கள்ளச்சாராய விவகாரம் குறித்து பேச அனுமதி கேட்டு அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு கள்ளச்சாராய சம்பவம் குறித்து விவாதிக்க அதிமுக எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகர் நினைத்ததை நினைத்த நேரத்தில் பேச முடியாது. பேச வேண்டிய நேரத்தில் அனுமதி தருகிறேன் என கூறினார். ஆனால் அதை ஏற்காமல் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, கள்ளச்சாராய மரண விவகாரத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தவறான தகவல்களை தருவதாக குற்றம் சாட்டினார். கையாளாகாத ஆட்சியினாலும் நிர்வாகத்திறனற்ற ஆட்சியினாலும்தான் இத்தனை உயிர்கள் பறிபோயுள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.
சட்டசபையில் இன்றைய தினம் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண் துறை மானிய கோரிக்கைகள் மீது இன்று விவாதம் நடைபெறுகிறது.
மேலும் கால்நடை பராமரிப்பு, மீன்வளத்துறை, பால்வளத்துறை மானிய கோரிக்கைகள் மீது இன்று விவாதம் நடைபெறுகிறது. அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி மானிய கோரிக்கை விவாதத்தில் பதில் தர உள்ளனர். மேலும் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் விவாத்ததில் பதில் தர உள்ளனர்.
What's Your Reaction?
![like](https://kumudam.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudam.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudam.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudam.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudam.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudam.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudam.com/assets/img/reactions/wow.png)