"கீழடியில் கிடைத்த 5,765 அகழாய்வு பொருட்களை ஒப்படைக்கவும்" - நீதிமன்றம் உத்தரவு...

Feb 29, 2024 - 17:27
Feb 29, 2024 - 17:29
"கீழடியில் கிடைத்த  5,765 அகழாய்வு பொருட்களை ஒப்படைக்கவும்" - நீதிமன்றம் உத்தரவு...

கீழடி அகழாய்வு அறிக்கை வெளியிட்ட பின், இந்திய தொல்லியல் துறையிடம் உள்ள 5,765 அகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013 - 2016 ஆம் ஆண்டு வரை மத்திய அரசு சார்பில் அகழாய்வு பணியை தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்டார். இந்த அகழாய்வின் போது 5,000-க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த பொருட்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து திடீரென அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து ஸ்ரீராமன் என்பவர் கீழடி தொல்லியல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு 3 ஆம் கட்ட அகழாய்வில் குறிப்பிடும் படியான கண்டுபிடிப்புகள் இல்லை என தெரிவித்தார். முதல் 2 கட்ட கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசிடம் தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில்  கீழடியில் நிலவிய கலாச்சாரம், விவசாயம் செய்த பயிர்கள், விலங்குகள், நகர நாகரீகத்தை நோக்கி நகர்ந்த தன்மை குறித்து விரிவாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் வழக்கறிஞர் கனிமொழி மதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கடந்த 2016 ஆம் ஆண்டு பொதுநல மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார், கங்க பூர்வாலா மற்றும் தனபால் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வழக்கறிஞர் கனிமொழி மதி, கீழடி அகழாய்வு பணிகளை கண்காணிக்கும் அதிகாரியாக மீண்டும் அமர்நாத் ராமகிருஷ்ணனை நியமிக்க வேண்டும் என்றும், கீழடியில் நடைபெற்ற 2 கட்ட அகழாய்வில் 2,200 ஆண்டு பழமையான 5,000-க்கும் அதிகமான பழங்கால பொருட்கள் மத்திய அரசிடம் உள்ளது. அதனை மீண்டும் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என வாதிட்டார்.

தொடர்ந்து வாதாடிய மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், அமர்நாத் ராமகிருஷ்ணன் கடந்த 2017ம் ஆண்டு கவுகாத்தி மாற்றம் செய்யப்பட்டு, அதன் பின்பு கோவா, தற்போது தென்னிந்திய கோவில்கள் தொல்லியல் கண்காணிப்பாளராக உள்ளார் என தெரிவித்தார். மேலும் கீழடி அகழாய்வு குறித்த அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், கீழடி 2 கட்ட அகழாய்வில் மொத்தம் 5,765 பொருட்கள் கிடைத்தன என தெரிவித்தார். அவை அனைத்தும் இந்திய தொல்லியல் துறையின் சென்னை அலுவலகத்தில் உள்ளது என்றும், விரைவில் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்படும் என கூறினார். 

இதனை பதிவு செய்த நீதிபதிகள், "தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் சென்னையில் பணியமர்த்தப்பட்டு உள்ளார். அதில் எந்த முடிவும் எடுக்க முடியாது. மத்திய அரசு 9 மாதங்களில் கீழடியில் நடத்திய 2 கட்ட அகழாய்வு குறித்த அறிக்கையை வெளியிட உள்ளது. அதன் பின் இந்திய தொல்லியல் துறையிடம் உள்ள 5,765 அகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்" என  மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow