திருப்பரங்குன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : தேதிகுறிப்பிடாமல் ஒத்தி வைப்பு
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்புவழக்கை தேதி குறிப்பிடாமல் மதுரை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி தீபம் ஏற்றுவதற்கு கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆகியோர் ஆஜராக வேண்டும் என நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் P.S. ராமன் இறுதி வாதத்தை இன்று முன்வைத்தார்.
தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என மனு தாக்கல் செய்த அரச பாண்டி தரப்பு, ராம ரவி குமார் தரப்பு, சிக்கந்தர் தர்காவில் அங்கு விளக்கு ஏற்றப்படுகிறது. அதைப்போன்று கோவில் நிர்வாகம் சார்பில் இங்கு தீபம் ஏற்ற வேண்டும் என வாதத்தை முன்வைத்தனர்.
தொடர்ந்து, தர்கா தரப்பு வழக்கறிஞர் தனது இறுதி வாதத்தில், இதுபோன்ற விவகாரங்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மனுதாரர் உரிமையியல் நீதிமன்றத்திற்கு தான் செல்ல வேண்டும் எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல், ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
What's Your Reaction?

