ஆரோக்கியம் என்பது ஒரே நாளில் கிடைத்துவிடாது- நடிகர் சிவகுமார் அட்வைஸ்

83 வயதிலும் இளமையாக காட்சியளிக்கிறார் நடிகர் சிவகுமார். உடல்நலனில் அதிக கவனம் செலுத்தும் சிவகுமாருடனான நேர்க்காணல் தொகுப்பு இந்த பதிவு.

Jun 17, 2025 - 14:01
ஆரோக்கியம் என்பது ஒரே நாளில் கிடைத்துவிடாது- நடிகர் சிவகுமார் அட்வைஸ்
Actor Sivakumar special interview

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்’ என்பது வள்ளுவர் வாக்கு. இதனைத் தம் வாழ்வில் பல ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வருகிறார், நடிகரும் ஓவியருமான சிவகுமார். 83 வயதானாலும்கூட, இளமையாகவும் ஆரோக்கியத்துடனும் உற்சாகமாக வலம்வருகிறார். தினசரி யோகா, நடைப்பயிற்சி, தியானம், பிராணாயாமம் என நெறிமுறைகளோடு வாழ்ந்துவருகிறார். திரையுலக மார்க்கண்டேயர் சிவகுமாரிடம் பேசினோம். 

எந்த வயதிலிருந்து யோகா செய்கிறீர்கள்? 

‘‘1959-ம் ஆண்டிலிருந்து என் 17 வயது முதலே தொடர்ச்சியாக 65 வயது வரை கடினமான பல்வேறு யோகாசனங்களை செய்து வந்தேன். அதன்பிறகு, தற்போது வரை சற்று இலகுவான ஆசனங்கள், தியானம் மற்றும் மூச்சுப்பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்துவிடுவேன். பின்னர், ஒரு மணிநேரம் யோகாசனங்கள் செய்வேன். அதன்பிறகு, 45 நிமிடங்கள் தொடர்ந்து நடைப்பயிற்சியினைத் தவறாமல் மேற்கொள்வது, என் தினசரி வழக்கம். எவ்வளவு வேலைகள் இருந்தாலும், மாதம் 25 நாள்கள் தவறாமல் யோகா செய்துவிடுவேன். உடலைக் கட்டுக்கோப்பாகப் பராமரிக்கத்தான் முதன்முதலில் யோகாவை பயிற்சிசெய்யத் துவங்கினேன். பிறகு, அதனுடைய முழுப் பலனையும் உணர்ந்துகொண்டு, அதீத ஈடுபாட்டுடன் தொடர்ந்து யோகா செய்துவருகிறேன்.’’

தங்கள் இளமையின் ரகசியம்? 

‘‘கடந்த 60 ஆண்டுகளாகவே காபி, தேநீர் மாதிரியான பானங்கள் ஏதும் அருந்துவதில்லை. எங்கள் வீட்டினர்கூட பெரும்பாலும் காபி, தேநீர் குடிப்பதில்லை. தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் நீராகாரம் அருந்துவேன். அதேபோன்று, 1988 முதலே அசைவ உணவுகள் சாப்பிடுவதில்லை. பொதுவாகவே, 40 வயதிற்கு மேல் அசைவ உணவுகளைக் குறைத்துக்கொண்டால், நம் உடலுக்கும் செரிமான உறுப்புகளுக்கும் நல்லது. நான் கடந்த 76 ஆண்டுகளாகச் செய்துவரும் யோகாசனப் பயிற்சிகள் மற்றும் என் வாழ்வியல் நெறிமுறைகளே, நீங்கள் குறிப்பிடும் என் இளமையின் பெரும் ரகசியமாக இருக்கலாம்.’’ 

யோகாவில் தங்களுடைய குரு? 

‘‘தற்போதுபோல அன்றைய காலகட்டத்தில் ‘யோகா வகுப்புகள்’ எல்லாம் கிடையாது. 1959-ம் ஆண்டில் வி.என்.குமாரசாமி மற்றும் பெங்களூரு சுந்தரம் ஆகியோர் பிரபல பத்திரிகையில் யோகாசனம் குறித்து தொடர் எழுதிக்கொண்டிருந்தார்கள். அந்தப் புத்தகங்கள் பைண்டிங் செய்யப்பட்டு, கன்னிமாரா நூலகத்தில் கிடைத்தன. அவற்றை முன்மாதிரியாகக் கொண்டே யோகாசனப் பயிற்சிகள் செய்துவந்தேன். அதன்பிறகு, ‘ஆசனா’ ஆண்டியப்பன் அவர்களிடம் யோகா பற்றிய விவரங்களைக் கேட்டறிந்துகொண்டேன். என் மகன்கள் சூர்யா, கார்த்தி இருவருக்கும் ‘ஆசனா’ ஆண்டியப்பன் அவர்களின் மருமகனும் யோகா ஆசிரியருமான கிருஷ்ணமூர்த்தி அவர்கள்தான் யோகா கற்றுக்கொடுத்தார்.’’

துறைசார்ந்து பயணிக்க, யோகா தங்களுக்கு எவ்வாறு உதவுகிறது? 

‘‘24 வயதில் நடிக்க வந்தேன். ஒரு நடிகராக எனக்கு ஃபிட்னஸ் ரொம்பவும் முக்கியம். அதற்கு, யோகாவைவிட சிறந்தப் பயிற்சி வேறேதுமில்லை எனத் தோன்றியது. ‘சிந்து பைரவி’ படத்திற்காக, விசாகப்பட்டினம் கடற்கரையில் பாறையின் மீது 20 அடி உயரத்தில் அலைகள் எழும்பும் சூழலில் யோகா போஸில் அமர்ந்து, பாடல் வரிகளை ‘play back’ இல்லாமல் மனப்பாடமாக உச்சரித்து, நடித்தேன்.

தொடர்ந்து யோகா பயிற்சிசெய்வது, நினைவாற்றல் மற்றும் கவனக்குவிப்பு போன்றவற்றிற்கு மிகவும் உதவியாக இருக்கும். இவை, அனைத்து துறைகளுக்கும் பொதுவானவைதானே? என் ஓவியத்துறைக்கு தேவை, திறமையோடுகூடிய அதிகமான கவனக்குவிப்பு. நான், 20 வயதில் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் அக்னிவீரபத்ரர்- அகோரவீரபத்ரர் மண்டபத்தில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ந்து 10 மணிநேரம் ஒரே இடத்தில் அமர்ந்தபடி ஓவியம் வரைந்தேன். இதுபோன்ற பல தருணங்களில் கவனம் சிதறாமல் துடிப்புடன் செயல்பட யோகா பயிற்சி எனக்கு பெருமளவு உதவிசெய்யும். இதேபோன்று தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் ஆலயத்திலும், திருவண்ணாமலை ஆலயத்திலும் 6 மணிநேரம் தொடர்ச்சியாக ஓவியம் வரையமுடிந்தது!

பொதுவாகவே யோகாவினால் நிறைய நற்பலன்களை அனைவராலும் பெறமுடியும். அதனை அனுபவித்து உணர்ந்தால் மட்டும்தான் புரிந்துகொள்ள முடியும். என்னைவிட, என் மகன் சூர்யா அருமையாக யோகாசனங்கள் செய்வார். ‘ஆதவன்’ படத்தில்கூட நிறைய ஆசனங்கள் செய்துகாட்டி இருப்பார்.’’ 

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, வாசகர்களுக்கு தாங்கள் சொல்ல விரும்புவது? 

‘‘உடற்பயிற்சியோடு மனப்பயிற்சியும் இணைந்ததுதான்,யோகா’. இதனுடன் தியானமும் மிகவும் இன்றியமையாதது. யோகக்கலை என்பது தற்போதைய காலகட்டத்தில் தோன்றியது அல்ல. மனிதகுலம் தோன்றிய காலத்திலேயே தோன்றியதுதான், இந்த அற்புதக்கலை. இது, இசை மற்றும் கலை போன்று அனைவருக்குமே பொதுவானது.

தினமும் அதிகாலையில் எழுந்துகொள்வது உடல்நலனை நன்றாக வைத்துக்கொள்ள உதவும். தூய்மையான அந்தப் பிராணவாயு, காலை நேரத்தில்தான் கிடைக்கும். அனைவருக்குமே இரவில் 8 மணிநேர உறக்கம் என்பது மிகவும் அவசியமான ஒன்று.

காலை எழுந்ததும், வெறும் வயிற்றில் வெளியே செல்லக்கூடாது. தினமும் குறைந்தபட்சம் ஒன்றரை லிட்டர் (8 டம்ளர்) தண்ணீர் அருந்துங்கள். நல்ல பழக்க வழக்கங்களோடு முறையான உணவுக் கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து யோகா செய்துவந்தாலே கூடுதலாக 10 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழலாம். யோகாவோடு தியானம் மற்றும் பிராணாயாமம் செய்தால், அபரிமிதமான நற்பலன்களைப் பெறமுடியும். தினமும் முக்கால் மணிநேர நடைப்பயிற்சி செய்தால்கூட, நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம். ஆனால், ஆரோக்கியம் என்பது ஒரே நாளில் வந்துவிடாது; முறையான மற்றும் தொடர்ச்சியான பழக்க வழக்கங்களால்தான் அளவற்ற ஆரோக்கியம் கிடைக்கும்.’’ 

சிறந்த முன்மாதிரி தந்தையாகத் திகழும் தங்களுடைய ‘தந்தையர் தின அறிவுரை’ என்ன? 

‘‘நம் குழந்தைகளுக்குத் தனியாக எதையும் நாம் சொல்லித்தர வேண்டியதில்லை. நாம் எப்படி இருக்கிறோமோ அதேபோல்தான் நம் குழந்தைகளும் வளர்வார்கள். நாம்தான் அவர்களுக்கு முன்மாதிரி. என்னைப் பொருத்தவரையில், என் பிள்ளைகள் எப்படி வளரவேண்டுமென நான் நினைக்கிறோனோ, அப்படி முதலில் நான் இருக்க நினைக்கிறேன்... அவ்வளவுதான்.’’     

(கட்டுரையாளர்: தனுஜா ஜெயராமன் / சிநேகிதி இதழ் / 26.06.2025)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow