Samantha: சர்ச்சையான மருத்துவ சிகிச்சை அட்வைஸ்... இன்ஸ்டாவில் விளக்கம் கொடுத்த சமந்தா!

தவறான மருத்துவ சிகிச்சையை பரிந்துரைத்ததாக சமந்தா மீது கடும் விமர்சனம் எழுந்தது. இதனையடுத்து அவர் தற்போது அறிக்கை வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார்.

Jul 5, 2024 - 13:11
Samantha: சர்ச்சையான மருத்துவ சிகிச்சை அட்வைஸ்... இன்ஸ்டாவில் விளக்கம் கொடுத்த சமந்தா!

சென்னை: பான் இந்தியா ஸ்டாராக வலம் வரும் சமந்தா, 2021ம் ஆண்டு முதல் நாக சைதன்யாவை பிரிந்து வாழ்ந்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் குஷி திரைப்படம் வெளியானது. இன்னொரு பக்கம் மயோசிடிஸ் பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சை எடுத்து வந்தார். இதுதவிர மேலும் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு சமந்தா சிகிச்சை எடுத்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அவர் சில மாதங்கள் நடிப்பில் இருந்து விலகி ரெஸ்ட் எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனிடையே சமந்தா தவறான மருத்துவ சிகிச்சைகள் பற்றி அட்வைஸ் செய்வதாக சர்ச்சை எழுந்தது.     

அதுமட்டும் இல்லாமல் தவறான மருத்துவ சிகிச்சைகளை பரிந்துரைக்கும் சமந்தா சிறைக்கு செல்ல வேண்டும் எனவும் மருத்துவர் ஒருவர் சமீபத்தில் பரபரப்பைக் கிளப்பினார். இந்த சர்ச்சைகளுக்கு நடிகை சமந்தா தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நான் உபயோகிக்கும் மருந்துகள், மருத்துவ வழிமுறைகளை சுயபரிசோதனை செய்த பின்பே அடுத்தவர்களுக்கு பரிந்துரைக்கிறேன். இந்த மருத்துவ வழிமுறைகள், மருந்துகள் எல்லாம் மிக மிக விலையுயர்ந்தவை என்று தெரியும். இதையெல்லாம் என்னால் பெற முடிகிறது என்று நினைக்கும்போது நான் அதிர்ஷ்டசாலி தான். 

ஆனால், அதையும் தாண்டி என்னைபோல உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படும் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் மாற்று வழியையும் எதிர்பார்க்கிறார்கள். அப்படியானவர்களுக்கு என் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் விஷயத்தைத் தான் நான் கூறியிருந்தேன். ஹைட்ரஜன் பெராக்சைடு எனக்கு பரிந்துரைத்த மருத்துவரும் எம்டி முடித்து 25 வருடங்களுக்கு மேலாக அனுபவம் கொண்டவர் தான். நான் தவறாக பரிந்துரைக்கிறேன். சிறைக்குச் செல்ல வேண்டும் என்று குற்றம் சாட்டிய மருத்துவரின் பதட்டத்தையும் அவரின் நல்ல நோக்கத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. என்னுடைய மருத்துவரையும் அவரையும் அமர வைத்து கலந்துரையாடல் நடத்த வேண்டும். மற்றபடி, என்னுடைய நோக்கம் அடுத்தவர்களுக்கு உதவுவதே தவிர காயப்படுத்துவது அல்ல என குறிப்பிட்டுள்ளார். 

சமந்தாவின் விளக்கமும் தற்போது சர்ச்சையாகியுள்ளது தான் பெரிய வேடிக்கையாக உள்ளது. ஹெ2ஓ2 எனும் ஹைட்ரஜன் பெராக்சைடு திரவத்தை நீருடன் கலந்து, அதை நெபுலைசர் எனும் கருவியில் ஊற்றி புகையாக மாற்றி ஆவி பிடித்தால் பல சுவாசப்பாதை பிரச்சினைகள் குணமாகும் என்பதை தான் சமந்தா கூறியிருந்தார். அதோடு இது மாத்திரை மருந்துகள் எடுப்பதை விட இது நல்ல சிகிச்சை என்றெல்லாம் எழுதியது தான் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ஹைட்ரஜன் பெராக்ஸைடு என்பது, தரை உள்ளிட்ட தளங்களை சுத்தம் செய்யப் பயன்படும் க்ளீனர்களில் கலந்துள்ள ரசாயனமாகும். இதை உபயோகப்படுத்தி இரும்பு பிளேட்டுகளில் உள்ள கறைகளைக் கூட நீக்க முடியும் அளவுக்கு சக்தி வாய்ந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

அதேபோல், இந்த திரவத்தைப் பருகினாலோ அல்லது நுகர்ந்தாலோ திசுக்களை அழிக்கும் அளவு சக்தி வாய்ந்தது. இருந்தாலும், இதனால் சுவாசப்பாதையில் எரிச்சல், தீவிர நுரையீரல் அழற்சி ஆகியவை ஏற்படும் என்பது தான் இதிலுள்ள சிக்கல் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சமந்தா கொடுத்துள்ள விளக்கம் மீண்டும் சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow