இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் – தேர்தல் ஆணையத்தை நாடிய ஓபிஎஸ்…
அதிமுக சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மனு.
![இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் – தேர்தல் ஆணையத்தை நாடிய ஓபிஎஸ்…](https://kumudam.com/uploads/images/202403/image_870x_6602cec9271e6.jpg)
மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அதிமுக இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டிருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு புது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் பெயர், சின்னம், கொடி உள்ளிட்டவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அதிமுகவின் பெயர் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதித்து கடந்த 18ம் தேதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில் மனுவில், 42 ஆண்டுகளாக அதிமுகவின் அடிப்படை தொண்டர் முதல் முதலமைச்சர் என உள்ளிட்ட பொறுப்புகளை வகித்த தனக்கு கொடி, சின்னத்தை பயன்படுத்த தடை விதித்தது பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே தனி நீதிபதியின் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், ஆர்.சக்திவேல் அமர்வில் நேற்று (மார்ச் 25) விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், இரட்டை இலை சின்னத்தை தங்களது தலைமையில் அவைத் தலைவராக இருந்த மதுசூதனனுக்கே தேர்தல் ஆணையம் வழங்கியது. எனவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் இரட்டை இலை சின்னம்கோரி தேர்தல் ஆணையத்தை அணுகுவதற்கு தடை விதிக்க கூடாது எனவும் வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். அதே சமயம், இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுக எந்த தடையும் கிடையாது எனக் கூறிய நீதிபதிகள் இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 10-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர்செல்வம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், தனது தலைமையிலான அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்காவிட்டால் சின்னத்தை முடக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்களவை தேர்தல் களத்தில் அதிமுக தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், ஓ.பன்னீர் செல்வத்தின் இந்த மனு எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?
![like](https://kumudam.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudam.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudam.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudam.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudam.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudam.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudam.com/assets/img/reactions/wow.png)