”இந்தி மாதம் கொண்டாடப்படுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல..”  - டிடிவி தினகரன்!

இந்தி பேசாத மாநிலமான தமிழகத்தில் இந்தி மாதம் கொண்டாடப்படுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

Oct 18, 2024 - 17:00
Oct 18, 2024 - 17:20
”இந்தி மாதம் கொண்டாடப்படுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல..”  - டிடிவி தினகரன்!

தூர்தர்ஷன் தமிழ் எனப்படும் சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவும், சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்களும் இன்று மாலை நடைபெறும் என்றும், அந்நிகழ்ச்சிகளில் தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான இந்தி திணிப்பு என்று தமிழ்நாட்டின் ஆளும் கட்சித் தொடங்கி எதிர்க்கட்சிகள் வரை உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றன. 

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அதில், “தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டிருக்கும் தமிழகத்தில் இந்தி மாத கொண்டாட்டங்கள் நடைபெறுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல – இனி வரும் காலங்களில் இதுபோன்ற கொண்டாட்டங்கள் நடத்தப்படுவதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும். 

சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தின் இந்தி மாத கொண்டாட்டங்கள் நிறைவு விழா மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன் விழா கொண்டாட்டங்கள் நிகழ்வில் மாண்புமிகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

சொல் வளத்திலும், இலக்கணச் செழுமையிலும், செய்யுள் ஆளுமையிலும், பண்பாட்டுச் சிறப்பிலும் தலைசிறந்ததாக திகழும் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழா நடத்துவதும், அதில் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் விருந்தினராக பங்கேற்பதும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

மேலும், “இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த ஒரு மொழிக்கும் தேசிய மொழி என்ற அடையாளத்தையோ, அங்கீகாரத்தையோ வழங்காத நிலையில், பல்வேறு மொழிகள் பேசும் இந்திய நாட்டில் இந்தி மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதும், இந்தி பேசாத மாநிலமான தமிழகத்தில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதும் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. 

எனவே, இந்தி மொழி பேசாத மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் தமிழ்நாட்டில் இந்தி மொழி கொண்டாட்ட நிகழ்வுகளை இனிவரும் காலங்களில் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்” என்று டிடிவி தினகரன் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow