டீயில் மயக்க மருந்து: இளம்பெண்ணை சீரழித்த முதியவர்-புகார் அளித்தும் கண்டுகொள்ளாத போலீஸ்

கோவை மாநகர காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணைய உத்தரவின் பேரில் போலீசார் நடவடிக்கை

Sep 25, 2024 - 10:15
டீயில் மயக்க மருந்து: இளம்பெண்ணை சீரழித்த முதியவர்-புகார் அளித்தும் கண்டுகொள்ளாத போலீஸ்
கோவை அருகே டீயில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை, மருதமலை அடிவாரம் ஐ.ஓ.பி காலனி திரு.வி.க நகரைச் சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன் (68). பிசியோதெரபிஸ்ட்டான இவருக்கு சமூக வலைதளம் மூலம் 23 வயதான இளம்பெண் அறிமுக ஆகியுள்ளார். அவர் கட்டிடக் கலை நிபுணர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர்.  அப்போது, ஆனந்தகிருஷ்ணன் தனது வீட்டை நேரில் பார்வையிட்டு புதுப்பித்துக் கட்டி தர வேண்டும் என்று அந்த இளம் பெண்ணிடம் கூறி உள்ளார். அதன்பேரில் அந்த இளம்பெண் அவருடைய வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லை அந்த சூழ்நிலையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். இளம்பெண்ணுக்கு டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்து உள்ளார். அதைக் குடித்ததும் இளம்பெண் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து ஆனந்த கிருஷ்ணன் அந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 
மயக்கம் தெளிந்து எழுந்த இளம்பெண் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஆனந்த கிருஷ்ணனிடம் கேட்டபோது, வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதுகுறித்து அந்த இளம் பெண் கோவை மேற்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால் காவல்துறையினர் முறையாக விசாரணை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அந்த இளம் பெண் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் இளம் பெண்ணின் புகார் தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி கோவை மாநகர காவல் துறைக்குத் தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து உதவி கமிஷனர் கரிகால் பாரி சங்கர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.அதில் அந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. உடனே தேனி மாவட்டம் குமுளி பகுதியில் தலைமறைவாக இருந்த ஆனந்த கிருஷ்ணனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow