கட்சியாக மாறும் ‘வீ தி லீடர்ஸ்’...? செப்டம்பரில் ஆட்டத்தை தொடங்கும் அண்ணாமலை..?
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மாநில அரசியல் களம் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வரும் நிலையில், பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தனது அடுத்த அரசியல் பயணத்தை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவில் இருந்து விலகிய பின்னர் ‘வீ த லீடர்ஸ்’ என்ற இயக்கத்தை தொடங்கிய அண்ணாமலை, அதனை அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இயக்கத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்காக மாநிலம் முழுவதும் மாநாடுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
முதல் மாநாடு பொள்ளாச்சியில் நடைபெற்ற நிலையில், அடுத்த மாநாட்டை தூத்துக்குடியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தென் மாவட்டங்களில் தனது அரசியல் ஆதரவை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நகர்வு மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தொடர்ச்சியாக, மண்டல வாரியாக மாநாடுகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், புதிய அரசியல் கட்சிக்கான பெயர் மற்றும் கொடி இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வாரத்தில் அவற்றை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் மதுரை அல்லது திருச்சியில் பிரம்மாண்டமான முதல் மாநாட்டை நடத்த ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.
வரவிருக்கும் உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல்களை இலக்காகக் கொண்டு அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க அண்ணாமலை தரப்பு திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மாநாடு நடைபெறும் இடம் குறித்து தமிழகம் முழுவதும் உள்ள இயக்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?