“தாமரையை நோக்கி நகரும் சூரியன்?” - திமுகவை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்!
தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கி, திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக வாக்களிப்பதைத் தவிர்த்து, திமுக வாக்கெடுப்பை புறக்கணிக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அதனை முன்வைத்து தனது கருத்துகளை அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மசோதாவுக்கு எதிராக வாக்களிக்காமல் விலகி நிற்பதால் அது நிறைவேறுவதற்கு வாய்ப்பு உருவாகும் என தவெக உள்ளிட்ட கட்சிகள் கூறி வருவதை சுட்டிக்காட்டியுள்ள ப்ளூ சட்டை மாறன், இந்த விவகாரத்தில் திமுக வெளிப்படையான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
திமுகவின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு தொடர்ந்தால், எதிர்காலத்தில் அக்கட்சி தேர்தல் ரீதியாக பாதிக்கப்படலாம் என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார். குறிப்பாக பாஜகவின் இந்துத்துவ அரசியலுக்கு எதிரான அரசியல் சக்தியாக திமுகவை நம்பும் வாக்காளர்கள், அக்கட்சியின் நிலைப்பாட்டால் அதிருப்தி அடையக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சியை தடுப்பதற்காக பாஜகவுடன் திமுக மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ இணையும் முயற்சியில் ஈடுபட்டால், அது அக்கட்சிக்கே பாதகமாக அமையும் என ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.
பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கைகளை திமுக தொடர்ந்து முன்னிறுத்தி வரும் நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமைக்காது என்பதை திமுக தலைமை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேநேரத்தில், அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை என்ற நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டு பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்தால், அதன் விளைவுகளை அக்கட்சியே எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார்.
தனது பதிவின் முடிவில், “சூரியன் அஸ்தமிக்கட்டும்” என்ற கடுமையான அரசியல் விமர்சனத்துடன் திமுகவை அவர் சாடியுள்ளார். தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் திமுகவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ள நிலையில், ப்ளூ சட்டை மாறனின் இந்த கருத்துகள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
What's Your Reaction?