கூட்டுறவு வங்கி வேலைக்கு லஞ்சம்? முன்னாள் தி.மு.க. ஆட்சிக்கு புதிய சர்ச்சை!

கூட்டுறவு வங்கி பணி நியமனத்தில் முறைகேடு மற்றும் லஞ்சம் நடந்ததாக முன்னாள் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Jul 15, 2026 - 20:00
கூட்டுறவு வங்கி வேலைக்கு லஞ்சம்? முன்னாள் தி.மு.க. ஆட்சிக்கு புதிய சர்ச்சை!

'மு ந்தைய தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளுக்கான பணியாளர் நியமனத்தில் மெகா மோசடி நடைபெற்றுள்ளதாக பகீர் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் தகுதியுடையவர்கள் மற்றும் நேர்மையானவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் நடைபெற்ற ஊ ழலை தோண்டியெடுத்தால் தி.மு.க. மாஜி அமைச்சர்கள் பலர் சிக்குவார்கள் என கொளுத்திப்போடுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

இதுகுறித்து விவசாய முன்னேற்றக் கழக சங்கத்தின் பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியத்திடம் பேசினோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு உதவியாளர், எழுத்தர் ஆகிய பணியிடங்களுக்கு மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் மூலம் தேர்வு வைத்து ஆள் எடுக்கின்றனர். அதன்படி 2023, 2025ல் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு நடந்தது. தமிழகம் முழுக்க சரியான முறையில் தேர்வை அணுகியவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. மாறாக 7 லட்சம் வரை லஞ்சமாக கொடுத்தவர்களுக்கே வேலை கிடைத்துள்ளது.

எனது மாவட்டமான நாமக்கல்லில் 2023ல் நடந்த தேர்வில் 1,256 பேரும், 2025 தேர்வில் 1,255 பேரும் பங்கேற்றனர். இவ்விரு தேர்வுகளில் 2023ல் 19 % பேரும், 2025ல் 10.4 5% பேரும் தேர்ச்சி பெற்றனர். அதன்பிறகு மூன்று பேர்கொண்ட குழு நேர்முகத் தேர்வு நடத்தி ஆட்களை வேலைக்கு எடுத்தது. இதுகுறித்து தேர்வில் என்ன கேள்வி கேட்டீர்கள், தேர்வாளர்கள் என்ன பதில் சொன்னார்கள்? என்று ஆர்.டி.ஐ யில் கேட்டேன். அதற்கு 'கேள்வி, பதில்களை எல்லாம் நாங்கள் பதிவு செய்வதில்லை' என்றே பதில் வந்தது. இந்த மாவட்டத்தில் மட்டுமல்ல, மாநிலம் முழுவதுமே எந்த மாவட்டத்திலும் அலுவலகக் கோப்புகளை பதிவு செய்வதில்லை என்றே சொல்கிறார்கள். ஆக, 'கேள்வியும் கேட்கவில்லை, பதிலும் சொல்லவில்லை... பிறகு எப்படி தேர்வானவர்களுக்கு மார்க் போட்டு செலக்ட் செய்தீர்கள்?" என்றதற்கு எந்த அதிகாரியிடமும் பதில் இல்லை.

ஒவ்வொருவரிடமும் 3 முதல் 7 பணி நியமனம் நடைபெற்றிருக்கிறது. லட்சம் வரை வாங்கிக்கொண்டே இந்த ஊழலுக்காக நேர்முகத் தேர்வு டிராமா நடைபெற்றிருக்கிறது. வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கஷ்டப்பட்டு படித்தவர்களை முந்தைய தி.மு.க. அரசு மோசடி செய்து ஏமாற்றியுள்ளது. ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல இப்படி தமிழகம் முழுக்க எத்தனை கோடிகளை மாஜி தி.மு.க. அமைச்சர்கள் கொள்ளை அடித்துள்ளனரோ தெரியவில்லை. இதை தற்போதைய த.வெ.க. அரசு தீவிரமாக விசாரித்தால் பல மாஜி அமைச்சர்கள் சிக்குவார்கள்" என்றார் ஆவேசமாக.

இதுகுறித்து மாவட்ட, மாநில கூட்டுறவு அதிகாரிகளிடம் கேட்டோம். "சங்கடத்துல மாட்டிவிட்றாதீங்க சார்" என நழுவினார்கள். "அ.தி.மு.க.வும் சரி, தி.மு.க.வும் சரி ரெண்டு பேருமே லட்சங்களைப் பெற்ற பிறகே வேலையை கொடுத்தாங்க. தேர்வு என்பதே கண் துடைப்புதான்" என்றனர் எழுத்துத் தேர்வை மேற்பார்வையிட்ட அதிகாரிகள். தி.மு.க. மாஜி அமைச்சர்களுக்கு நேரம் சரியில்லையோ.. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow