”மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன்...” - மோகன் ஜி பேட்டி

பஞ்சாமிர்தம் வழக்கை சட்ட ரீதியாக சந்தித்து விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவேன் என்று இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார். 

Sep 25, 2024 - 17:36
”மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன்...” - மோகன் ஜி பேட்டி

காவல்துறை செய்தது இயக்குநர் மோகனுக்கு மன உளைச்சலையும் மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது என அவரது வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். 
 
நாடு முழுவதும்  திருப்பதி லட்டு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து கோயில்களுக்கு வழங்கப்படும் நெய்யின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது. 

அதேபோல, பழனி கோவில் பஞ்சாமிர்த பிரசாதம் குறித்துக் கடந்த சில நாட்களாக அவதூறு பரப்புவதாகக் கூறி பழனி அடிவார காவல் நிலையத்தில் பாஜக பிரமுகர்கள் வினோஜ் பி செல்வம் மற்றும் செல்வக்குமார் மீது கோவில் நிர்வாகம் புகார் அளிக்கப்பட்டது. இதில் செல்வகுமார் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு முன் பிரபல திரைப்பட இயக்குநர் மோகன்ஜி பழனி பஞ்சாமிர்தம் குறித்தும், அதில் ஆண்மைக் குறைவு, கருத்தடை மாத்திரைகள் கலக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.  

அதில், ”இது எனக்குக் கிடைத்த செவி வழி செய்தி என்றும், என்னிடம் ஆதாரம் இல்லை” என யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தார் மோகன் ஜி. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பழனி கோவில்  தேவஸ்தானம் சார்பில் பழனி அடிவாரம்  காவல் நிலையத்தில் மோகன் ஜி மீது புகார் கொடுக்கப்பட்டது.

இதேபோல் திருச்சி சமயபுரம் காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இயக்குநர் மோகன்ஜி மீது தவறான தகவல்களைப் பரப்புவது, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது ஆகிய பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மோகன் ஜி நேற்று சென்னை காசிமேட்டில் உள்ள தனது வீட்டில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற ஜாமினில் விடுவிக்கப்பட்டார். 

இந்த நிலையில், தனது வழக்கறிஞர் பாலுடன் காவல்துறைமீது மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் மோகன் ஜி புகார் மனு அளித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் மோகன் ஜி, ”என் குழந்தையை பள்ளியில் விட்டு வரும் வழியில் நேற்று எட்டு மணி அளவில் காவல்துறையினர் என்னிடம் எதற்காக கைது செய்கிறோம் என்று எதுவும் கூறாமல், ராயபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்கிறோம் என்று கூறி திருச்சி வரை கைது செய்து  அழைத்துச் சென்றனர். எனக்கு சாதகமாக எதுவும் நடைபெறவில்லை...
திருப்பதியில் நடந்த விஷயத்தை அங்கு உள்ள முதல்வரே கூறினார். அதைப் போன்று தான் எனக்கு கிடைத்த செவி வழி செய்தி பற்றி உண்மையாக இருக்கக் கூடாது, அப்படி இருந்தால் நடவடிக்கை வேண்டும் என்ற அடிப்படையில் நான் கூறினேன். 
நீதிமன்றத்தில் இந்த வழக்கு இருப்பதினால் அதனை பற்றி பேச விரும்பவில்லை. சட்ட ரீதியாக சந்தித்து விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவேன். உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்தார். 

முன்னதாக பேசிய மோகன் ஜி-யின் வழக்கறிஞர் பாலு, “சமூக நல்லிணக்கத்தை கெடுக்க வேண்டும்; பொது அமைதியை கெடுக்க வேண்டும் ; அரசுக்கு அவப்பெயர் கொடுக்க வேண்டும் என்ற ரீதியில் அவர் பேசினால் நடவடிக்கை எடுக்கலாம். அப்படி எதுவும் இல்லையே. சாதாரணமாக சமூக பொறுப்புடன் கூறிய விஷயம்.

நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு மோகனுக்கு மன உளைச்சலையும் மனவேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் வழக்கு போட்டால் சட்டரீதியாக சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் ஆனால் காவல்துறையும் சட்டரீதியாக நடந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow