வழுக்கி விழுந்தவர் ஸ்டாலின்... நக்கலடித்த எடப்பாடி பழனிசாமி

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்ட கபட நாடகத்தை, மக்களவை தேர்தலில் மீண்டும் திமுக நடத்தப் பார்க்கிறது - எடப்பாடி பழனிசாமி

Mar 29, 2024 - 21:58
வழுக்கி விழுந்தவர் ஸ்டாலின்... நக்கலடித்த எடப்பாடி பழனிசாமி

விவசாயத்தைப் பற்றி ஒன்றும் அறியாமல், வரப்பில் வழுக்கி விழுந்தவர் தான் ஸ்டாலின் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நக்கலடித்தது காஞ்சிபுரம் பிரசாரத்தில் கலகலப்பை ஏற்படுத்தியது.

காஞ்சிபுரம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, தங்கள் கூட்டணி குறித்து விமர்சிக்கவோ, கேள்வி கேட்கவோ முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். கருணாநிதி குடும்பம் அல்லாத ஒருவரை, துணிச்சல் இருந்தால் கட்சியின் தலைவராகவோ, முதலமைச்சராகவோ  ஆக்க முடியுமா என்றும் சவால் விடுத்தார்.

திமுகவில் கருணாநிதி குடும்பத்தை விட்டால் வேறு ஆளே இல்லையா என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் மூத்த நிர்வாகிகளும் கோபாலபுரம் குடும்பத்திற்கு அடிமைகளாகவே இருக்கிறார்கள் என்று சாடினார்.  விவசாயத்தைப் பற்றி ஸ்டாலினுக்கு எதுவுமே தெரியாது என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். திருவாரூர் மாவட்டத்தில் தான் நாற்று நட்டதைப் பார்த்து ஸ்டாலினும் நாற்று நடுகிறேன் என்று வரப்பில் இறங்கி வழுக்கி விழுந்தார் என்று அவர் கூற சிரிப்பலையில் அரங்கம் அதிர்ந்தது.

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்ட கபட நாடகத்தை, மக்களவை தேர்தலில் மீண்டும் நடத்தும் திமுகவை மக்கள் அளிக்கும் தீர்ப்பு மு.க.ஸ்டாலினுக்கு பேரிடியாக இருக்கும் என்றும் விமர்சித்து எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow