”எதிர்காலத்தில் கெனிஷாவும் நானும் சேர்ந்து….” – பர்சனல் லைஃப் குறித்து பேசிய ஜெயம் ரவி!

விவாகரத்து சர்ச்சையைத் தொடர்ந்து தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தவறாக பேச வேண்டாம் என்று நடிகர் ஜெயம்ரவி கோரிக்கை வைத்துள்ளார். 

Sep 21, 2024 - 13:43
”எதிர்காலத்தில் கெனிஷாவும் நானும் சேர்ந்து….” – பர்சனல் லைஃப் குறித்து பேசிய ஜெயம் ரவி!

நடிகர் ஜெயம்ரவியின் நடிப்பில் இந்த ஆண்டு தீபாவளியன்று வெளியாக உள்ள பிரதர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் கதாநாயகன் ஜெயம்ரவி, கதாநாயகி பிரியங்கா, இயக்குநர் ராஜேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது மேடையில் பேசிய ஜெயம்ரவி, “ரசிகர்கள் கொடுக்கும் எனர்ஜியில் தான் என் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. எனது முதல் படத்தில் என்ன எனர்ஜியை கொடுத்தீர்களோ அதே எனர்ஜியை கடைசி படம் வரை கொடுப்பீர்கள் என்று தெரியும். மக்களை சந்தோஷப்படுத்துவது தான் எனது வேலை. குழந்தை போல என்னை வழி நடத்துவது ஊடகம் தான். பிரதர் என்ற தலைப்பை நான் தான் படத்திற்கு வைத்தேன். அக்காவுக்கும் தம்பிக்குமான அழகான திரைக்கதை தான் பிரதர் படம்” என தெரிவித்தார்.

இசை வெளியீட்டு விழா முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஜெயம்ரவி, கெனிஷா என்ற பாடகிக்கும் தனக்கும் தொடர்பு வெளியான தகவலுக்கு விளக்கம் அளித்தார்.

அதாவது, “ஒன்றே ஒன்றுதான் சொல்ல விரும்புகிறேன். வாழு வாழ விடு. என்னுடைய தனிப்பட்ட  விஷயத்தில் யாரையும் இழுக்காதீர்கள். ஏதேதோ பெயரையெல்லாம் சொல்லி ஏதேதோ செய்கிறார்கள். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை தனிப்பட்ட வாழ்க்கையாகவே இருக்கட்டும். கெனிஷா 600 மேடைகளில் பாடியவர். பல உயிரை காப்பாற்றிய ஒரு ஹீலர் அவர். 
வருங்காலத்தில் நானும் கெனிஷாவும் சேர்ந்து ஹீலிங் சென்டரை ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். என்னையும் கெனிஷாவையும்  தவறாக பேச வேண்டாம். எங்களுடைய நோக்கம் பல பேருக்கு உதவ வேண்டும் என்பதுதான் அதை யாரும் கெடுக்காதீர்கள். அதை யாராலும் கெடுக்கவும் முடியாது” என ஜெயம்ரவி தெரிவித்தார்.

ஜெயம்ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதற்கு பாடகி கெனிஷா தான் காரணம் என்று சமூக வலைத்தளங்களில் பரவிய கருத்துக்கு அவர் விளக்கம் கொடுத்துள்ளது சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow