ஈடனில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் வர்ணனை செய்ய தடையா? ஹர்ஷா போக்லே விளக்கம்
கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைப்பெறும் ஐபிஎல் போட்டிகளில் ஹர்ஷா போக்லே பங்கேற்ற தடை என செய்திகள் பரவிய நிலையில் மௌனம் கலைத்துள்ளார் ஹர்ஷா போக்லே.

இந்தியாவை சார்ந்த பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர்களில் ஒருவர் ஹர்ஷா போக்லே. அதேப்போல் நியூசிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான சைமன் டவுல், ஆகிய இருவரையும் கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைப்பெறும் ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளராக செயல்பட அனுமதிக்கக்கூடாது என பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் பிசிசிஐயிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் இணையத்தில் பரவின.
ஈடன் கார்டன்ஸ் மைதானம் உள்ளூர் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு உதவவில்லை, பிட்ச் பராமரிப்பாளர்கள் கொல்கத்தா அணிக்கு ஏற்ற வகையில் பிட்சினை தயார் செய்யவில்லை என ஹர்ஷா போக்லே மற்றும் சைமன் டவுல் முன்னர் குற்றம் சாட்டியிருந்தனர். இதன் அடிப்படையில் தான், பெங்கால் கிரிக்கெட் சங்க செயலாளர் நரேஷ் ஓஜா பிசிசிஐ-க்கு, சைமன் டவுல் மற்றும் ஹர்ஷா போக்லே இருவரையும் ஈடனில் நடைப்பெறும் போட்டிகளில் வர்ணனை பண்ண தடை செய்யுமாறு கடிதம் எழுதியுள்ளார் என தகவல்கள் இணையத்தில் கசிந்தன.
KKR vs GT : பங்கேற்காத ஹர்ஷா போக்லே
அதற்கேற்ப நேற்றைய தினம், ஈடனில் நடைப்பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் ஹர்ஷா போக்லே மற்றும் சைமன் டவுல் பங்கேற்கவில்லை. அப்போ, இணையத்தில் வெளியான தகவல் உண்மை தான் போல என பலரும் சமூக வலைத்தளங்களில் விவாதிக்க தொடங்கிவிட்டனர்.
ஈடனில் ஹர்ஷா போக்லே வர்ணனை செய்ய தடை என்கிற செய்தி தீயாக பரவ மெளனம் கலைத்தார் போக்லே. இதுக்குறித்து தனது X வலைத்தளத்தில் பதிவொன்றினையிட்டுள்ளார்.
அதில், ”கொல்கத்தாவில் நேற்று நடந்த ஆட்டத்தில் நான் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பது குறித்து சில உண்மைக்கு புறம்பான தகவல்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. சுருக்கமாகச் சொன்னால், நான் வர்ணனை செய்ய வேண்டிய போட்டிகளின் பட்டியலில் அது இல்லை. என்னிடம் நேரிடையாக கேட்டிருந்தால் இந்தப் பிரச்சினை தீர்ந்திருக்கும். கொல்கத்தாவில் இரண்டு ஆட்டங்களுக்கு நான் வர்ணனை செய்யும் பட்டியலில் சேர்க்கப்பட்டேன். முதல் ஆட்டத்திற்கு நான் வர்ணனை செய்தேன். என் குடும்பத்திலுள்ள ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக நான் இரண்டாவது ஆட்டத்தில் வர்ணனை செய்ய முடியவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
There are some inappropriate conclusions being drawn about why I wasn't at yesterday's game in Kolkata. Quite simply, it wasn't on the list of matches I was down to do! Asking me would have resolved the issue. Rosters are done before the tournament starts. I was rostered for two… — Harsha Bhogle (@bhogleharsha) April 22, 2025
இந்திய வீரர்களின் செயல்பாட்டினை விமர்சித்த காரணத்திற்காக வர்ணனையாளர்கள் பட்டியலிலிருந்து இர்பான் பதான் நீக்கப்பட்டதாக தகவல்கள் வந்த நிலையில், தற்போது ஹர்ஷா போக்லேவும் இந்த சுழலில் சிக்கியுள்ளார்.
What's Your Reaction?






