ரிலீஸ் ஆகாமலே இவ்ளோ பேர் பாத்துருக்காங்களா? ஷாக் கொடுத்த ஜனநாயகன்..!
இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிடப்பட்ட ஜனநாயகன் திரைப்படத்தை இதுவரை சுமார் 1.20 கோடி பார்வையாளர்கள் பார்த்துள்ளதாக காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த படம் என்றே சொல்ல வேண்டும். பொங்கல் ரிலீஸாக இப்படம் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், சென்சார் பிரச்னை காரணமாக பட ரிலீஸ் தள்ளப்போனது. இன்னும் இப்படத்திற்கான சென்சார் பிரச்னை தீராமல் உள்ள நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் அதாவது தேர்தல் நடைபெற்ற மாத்த்தில், ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிடப்பட்டது. ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்த சம்பவம் தொடர்பாக 21 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவர் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தனர்.
மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான அதிகாரிகள், திரைப்படம் சட்டவிரோதமாக பரவியதன் மூலம் 1.20 கோடி மக்கள் அதை பார்த்துள்ளதாகவும், குற்றச்சாட்டுக்குட்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டால் வழக்கின் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்படவோ, சாட்சிகள் மீது தாக்கம் செலுத்தப்படவோ வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தனர். இதனை பரிசீலித்த நீதிமன்றம், ஜாமின் வழங்க போதுமான காரணங்கள் இல்லை எனக் கூறி மனுக்களை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், இப்படத்தை யார் ரிலீஸ் செய்திருப்பார்கள் என்று இன்னும் முழுமையாக தெரியாத நிலையில், ஜனநாயகம் திரைப்படத்தின் தயாரிப்பாளரான கே.வெங்கட நாராயணாவுக்கு, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி வழங்கப்பட்டுள்ளது. இது அமைச்சர் பதவிக்கு இணையான அதிகாரங்களைக் கொண்ட ஒரு பதவியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?