கச்சத்தீவை தாரைவார்த்தது யார்? திமுகவா? காங்கிரஸா? சட்டப்பேரவையில் காரசார விவாதம்!

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளும் கட்சி–எதிர்க்கட்சி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

Sep 2, 2026 - 19:00
கச்சத்தீவை தாரைவார்த்தது யார்? திமுகவா? காங்கிரஸா? சட்டப்பேரவையில் காரசார விவாதம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இன்று ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கடும் விவாதம் நடைபெற்றது. கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கிய விவகாரத்தில் அப்போதைய தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அமைச்சர்களும், திமுக உறுப்பினர்களும் மாறுபட்ட கருத்துகளை முன்வைத்தனர்.

நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், “கச்சத்தீவைக் கொடுத்ததே அவர்கள்தான்” என எதிர்கட்சியினர் மீது குற்றச்சாட்டு வைத்ததால் சட்டமன்றத்தில் விவாதம் சூடுபிடித்தது. இதற்கு பதிலளித்த திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, கச்சத்தீவை வழங்கியது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசுதான் என்றும், கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என திமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், கச்சத்தீவை வழங்கும் முன்பு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியுடன் மத்திய அரசு பலமுறை ஆலோசனை நடத்தியதாகக் குற்றம்சாட்டினார். மேலும், கச்சத்தீவு விவகாரத்தில் அப்போதைய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து அதைத் தடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். பேருபாரி பகுதியை கிழக்கு பாகிஸ்தானுக்கு வழங்கும் விவகாரத்தில் அப்போதைய மேற்கு வங்க முதலமைச்சர் பி.சி. ராய் நீதிமன்றத்தை நாடி தடுத்ததை சுட்டிக்காட்டிய அமைச்சர், அதேபோல் கச்சத்தீவு விவகாரத்திலும் தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தை நாடியிருக்கலாம் எனத் தெரிவித்தார்.

அமைச்சரின் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பேசிய எ.வ.வேலு, தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமலேயே கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதாகவும், அதற்கு எதிராக திமுக பல்வேறு போராட்டங்களையும் தீர்மானங்களையும் மேற்கொண்டதாகவும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அதிமுக எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம், கச்சத்தீவு தொடர்பாக ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கைச் சுட்டிக்காட்டி, அப்போது மத்திய அரசுடன் திமுக கூட்டணியில் இருந்ததாகவும், இந்த விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு குறித்து ஆவணங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மறுபுறம், காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் தாரகை கத்பர்ட், கச்சத்தீவை வழங்கியதற்கு பதிலாக இந்தியா மிகப்பெரிய கடற்பரப்பான வாட்ஜ் பேங்க் பகுதியில் உரிமையைப் பெற்றதாகக் கூறினார். எனவே, கச்சத்தீவு ஒப்பந்தத்தை முழுமையான வரலாற்றுப் பின்னணியுடன் பார்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, கச்சத்தீவு விவகாரம் திட்டமிட்டு விவாதத்தைத் திசைதிருப்புவதற்காக கொண்டு வரப்பட்டதாக திமுக எம்.எல்.ஏ. கோவி.செழியன் குற்றம்சாட்டினார். படகுப் பிரச்சினை குறித்து விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், திடீரென கச்சத்தீவு விவகாரம் எழுப்பப்பட்டதாகவும், பின்னர் ஏற்பட்ட எதிர்ப்புக் காட்சிகளை மட்டும் சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ ஆக வெளியிடும் நோக்கத்துடன் இந்த விவாதம் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை விவாதங்கள் சமீபத்தில் நீண்ட நேரம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow