உலகக் கோப்பை கால்பந்து: புதிய உச்சம் தொட்ட மெஸ்ஸி..!

23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், லீக் சுற்று ஆட்டங்களில் அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி புதிய உலக சாதனை படைத்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். மற்றொரு முக்கிய ஆட்டத்தில் பிரான்ஸ் அணி ஈராக் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து: புதிய உச்சம் தொட்ட மெஸ்ஸி..!

டல்லாஸ் நகரில் நடைபெற்ற 'ஜெ' பிரிவு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணி ஆஸ்திரியாவை எதிர்கொண்டது. போட்டியின் தொடக்கத்திலேயே தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்ஜென்டினாவுக்கு 8-ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பை கேப்டன் லியோனல் மெஸ்ஸி பயன்படுத்தத் தவறினார். உலகக் கோப்பை வரலாற்றில் மெஸ்ஸி பெனால்டி வாய்ப்பை தவறவிடுவது இது மூன்றாவது முறையாகும்.

எனினும் அதனால் மனம் தளராத மெஸ்ஸி, 38-ஆவது நிமிடத்தில் சக வீரர் மெடினா வழங்கிய துல்லியமான பாஸை கோலாக மாற்றி அணியை முன்னிலைப்படுத்தினார். இந்த கோல் அவரது உலகக் கோப்பை பயணத்தில் மிக முக்கியமான ஒன்றாக அமைந்தது.

இந்த கோலின் மூலம் உலகக் கோப்பை போட்டிகளில் மெஸ்ஸி அடித்த மொத்த கோல்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. இதன்மூலம் ஜெர்மனியின் முன்னாள் நட்சத்திர வீரர் மிராஸ்லாவ் குளோசே படைத்திருந்த 16 கோல்கள் என்ற சாதனையை முறியடித்த மெஸ்ஸி, உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற புதிய உலக சாதனையை தனது பெயரில் பதிவு செய்துள்ளார். இந்த சாதனை கால்பந்து உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பிலடெல்பியா ஸ்டேடியத்தில் நடைபெற்ற 'ஐ' பிரிவு லீக் ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் ஈராக் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 14-ஆவது நிமிடத்திலேயே பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே முதல் கோலை அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.

இதற்கிடையில், போட்டி நடைபெற்று கொண்டிருந்தபோது பலத்த புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் ரசிகர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். பின்னர் ஆட்டம் மீண்டும் தொடங்கிய நிலையில், 54-ஆவது நிமிடத்தில் எம்பாப்பே தனது இரண்டாவது கோலையும் பதிவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து 66-ஆவது நிமிடத்தில் உஸ்மானே திம்பலி மேலும் ஒரு கோல் அடித்து பிரான்ஸ் அணியின் முன்னிலையை 3-0 என உயர்த்தினார். இறுதிவரை ஈராக் அணியால் பதிலடி கொடுக்க முடியாததால், 3-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. போட்டியின் போது ஈராக் அணிக்கு ஒரு மஞ்சள் அட்டையும் காண்பிக்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள பிரான்ஸ் அணி, தனது பிரிவில் முதலிடத்தை பிடித்து அடுத்த சுற்றை நோக்கி வலுவாக முன்னேறியுள்ளது. அதேநேரத்தில், தொடர்ந்து தோல்விகளை சந்தித்துள்ள ஈராக் அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow