மயிலாடுதுறையில் ஆணவக்கொலை? ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு....
மயிலாடுதுறை அருகே சாந்தங்குடி கிராமத்தில் காதலன் காதலி இருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் பார்த்திபன். அருகில் உள்ள சாத்தன்குடி கிராமத்தில் வசித்து வரும் 16 வயது சிறுமியும் பார்த்திபனும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இது இரு குடும்பத்தாருக்கும் தெரிந்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெண் வீட்டார் மீது பார்த்திபன் குடும்பத்தினர் சாதி வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
இதற்கிடையில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் சாந்தங்குடியில் உள்ள குமரவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஒரு கொட்டகையில் தூக்கிட்ட நிலையில் பார்த்திபன் மற்றும் 16 வயது சிறுமி ஆகியோரின் உடல் சடலமாக தொங்கினர். இதனை பார்த்த பொதுமக்கள் உடனே போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
உயிரிழந்தவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க 30க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெண் வீட்டார் ஆணவ கொலை செய்துவிட்டதாக இளைஞர் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது ஆணவ கொலை செய்யப்பட்டார்களா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
மேலும் இந்த வழக்கில் சிறுமியின் தந்தை லட்சுமிகாந்தன், சூர்யா, மணிமாறன், வசந்தன், விஜயகுமார் ஆகிய ஐந்து பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
What's Your Reaction?

