மேட்டூர் அணை திறப்பு- விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் துரைமுருகன்
மேட்டூர் அணையின் வடிகால்களை தூர்வாரும் பணிகள் மே மாதத்திற்குள் முடிவடைந்து ஜூன் 12 ஆம் தேதி அணை பாசனத்திற்காக திறக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் உறுதியளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நேரமில்லா நேரத்தின் போது கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய அதிமுக உறுப்பினர் காமராஜ், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் மே மாதத்திற்குள்ளாக தூர்வாரும் பணிகளை முடிக்க வேண்டியது கட்டாயம் எனவும், நடப்பு ஆண்டில் கால்வாய்கள், வடிகால்கள் என 822 தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி போதாது எனவும் கூறினார்.
அதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழையால் வடிகால் மற்றும் ஆறுகளில் மணல் திட்டு ஏற்பட்டிருப்பதாகவும், அவற்றை அகற்றி தண்ணீர் தடையின்றி செல்வதற்காக சுமார் 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். 98 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறும் இப்பணிகளை கண்காணிக்க ஒவ்வொரு டெல்டா மாவட்டத்திற்கும் தனியாக மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், அனைத்து தூர்வாரும் பணிகளும் மே மாதத்திற்குள் முடிக்கப்பட்டு ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் எனவும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார்.
”நான்கு ஆண்டுகளாக மேட்டூர் நீர் கடைமடை வரை சென்றிருக்கிறது. குடிமராமத்து இல்லை என உறுப்பினர் சொன்னார். விவசாயிகள் இலவசமாக மண் எடுக்க அனுமதி வழங்கியுள்ளோம், விவசாயிகளையும் அப்பணியில் ஈடுபடுத்தியுள்ளோம். குடிமராமத்து சட்டர்களை சீரமைக்கு உரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டர்களை புதியதாக மாட்டினால் திருடிக் கொண்டு சென்று விடுகிறார்கள். உறுப்பினர் சொன்ன இடங்களில் நிதிநிலைக்கு ஏற்ப தூர்வாரும் பணிகள் நடைபெறும்” எனவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
What's Your Reaction?






