“சுண்டெலியைப் போல ஏன் சைலன்ட்டாக இருக்கிறீர்கள்?”... ஊடகங்களைச் சாடிய ராகுல் காந்தி!

ஊடகங்களை எலியைப் போல அமைதியாக இருக்கக் கூடாது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Aug 14, 2026 - 10:40
“சுண்டெலியைப் போல ஏன் சைலன்ட்டாக இருக்கிறீர்கள்?”... ஊடகங்களைச் சாடிய ராகுல் காந்தி!

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தின் மகர் துவார் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் குறுக்கிட்டு கேள்வி எழுப்பினார்.

இதனால் கோபமடைந்த ராகுல், “என்னிடம் குறுக்கிட்டு கேள்வி கேட்டது போல் ஆளுங்கட்சியினரிடம் உங்களால் கேட்க முடியுமா?” என கேள்வி எழுப்பினார். அந்த செய்தியாளர் மீண்டும் கேள்வி எழுப்பியபோது, மேலும் கோபமடைந்த ராகுல், “என்னிடம் மட்டுமே குறுக்கீடு செய்கிறீர்கள். 24 மணி நேரமும் குறுக்கிடுகிறீர்கள். ஆனால், ஆளுங்கட்சியினரிடம் கேள்வியும் கேட்பதில்லை; குறுக்கீடும் செய்வதில்லை.

பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது ஊடகங்கள் ஒருபோதும் குறுக்கிடுவதில்லை. என்னிடம் மட்டும் ஏன் குறுக்கிடுகிறீர்கள்? அமித் ஷாவிடம் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது? அனைத்து ஊடகங்களும் ஏன் சுண்டெலியைப் போல மவுனம் காக்கின்றன?” என ராகுல் மீண்டும் கேள்வி எழுப்பினார்.

இதேபோல், நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மக்களவை எம்.பி. பிரியங்கா காந்தி, “ஊடகங்கள் மவுனமாக இருப்பதைப் போல நாங்களும் இருக்க வேண்டுமா?” என கேள்வி எழுப்பினார்.

மேலும், “மாணவர்கள் மீதான தடியடி விவகாரத்தில் மத்திய அரசை பொறுப்புக்கூறச் செய்வதற்கு பதிலாக, நாடாளுமன்ற முடக்கம் குறித்து எதிர்க்கட்சிகளை மட்டுமே ஊடகங்கள் கேள்வி கேட்பது ஏன்?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow