சவுக்கு சங்கருக்கு பெண்கள் எதிர்ப்பு... பறந்த செருப்புகள்.. போர்க்களமான எழும்பூர் நீதிமன்றம்
பெண் காவலர்கள் குறித்து தரக்குறைவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு 5 நாட்கள் காவல் நீட்டிப்பு வழங்கி, சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, பெண்கள் துடைப்பத்தை ஏந்தி போராட்டம் நடத்தியதில் அப்பகுதியிலில் பரப்பானது.
![சவுக்கு சங்கருக்கு பெண்கள் எதிர்ப்பு... பறந்த செருப்புகள்.. போர்க்களமான எழும்பூர் நீதிமன்றம்](https://kumudam.com/uploads/images/202405/image_870x_663efee9dff6f.jpg)
சென்னையை சேர்ந்த சவுக்கு சங்கர் யூ டியூபில் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து பிரபலமானவர். கடந்த சில தினங்களுக்கு முன்பு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த சவுக்கு சங்கர், பெண் காவலர்கள் குறித்து தரக்குறைவாகப் பேசியதாக கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் பெண் காவலர் ஒருவர் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் வைத்து கோவை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்து அவர் மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
அவர் மீது சென்னை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய இடங்களில் வழக்குகள் தொடரப்பட்டு போலீசார் கைது நடவடிக்கை எடுத்தனர். அவர் மீது தொடர்ந்து பல்வேறு புகார்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், சவுக்கு சங்கர் கஞ்சா கடத்தியதாக அவரையும் அவரது ஓட்டுநரையும் கைது செய்தனர்.
அதன் அடிப்படையில், சவுக்கு சங்கர் 5 வழக்குகளில் கைது செய்யப்பட்ட நிலையில், சிறையில் அவர் தாக்கப்பட்டு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கஞ்சா வழக்கு தொடர்பாக சென்னை மதுரவாயில் பகுதியில் உள்ள சவுக்கு சங்கர் இல்லம் மற்றும் தியாகராய நகர் பகுதியில் உள்ள அலுவலகத்தில் தேனி மாவட்டம் பழனிச்செட்டி அதிரடியாக சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் முடிவில் குடும்ப அடையாள அட்டை, டேப், மொபைல் போன், 2 லட்சம் ரொக்கம், கம்ப்யூட்டர், கஞ்சா அடைத்து வைக்கப்பட்ட 4 சிகரெட், வெப் கேமரா, கார், பேங்க் பாஸ்புக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து மதுரவாயல் தாசில்தார் சந்திரசேகர் முன்னிலையில் சவுக்கு சங்கர் வீட்டிற்கு போலீசார் சீல் வைத்தனர். அதேபோல் தியாகராய நகரில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை செய்த போலீசார், 10 பென்டிரைவ்கள், ஹார்டு டிஸ்குகள், ஆவணங்கள், லேப்டாப்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சவுக்கு சங்கருக்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக அவர் ஆஜர்ப்படுத்தப்பட்ட எழும்பூர் நீதிமன்றத்தில் குவிந்த பெண்கள் துடைப்பத்துடன் வந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது அவர் வந்த வாகனத்தின் மீது செருப்பு வீசப்பட்டது. மேலும், போலீஸ் வாகனத்தின் முன் படுத்துக்கொண்ட மூதாட்டி தர்ணாவில் ஈடுபட்டார்.
யூடியூப்பில் யார் மனதையும் புண்படுத்தும் வகையில் பேசமாட்டேன் என்று, சவுக்கு சங்கர் எழுத்துப்பூர்வமாக நீதிபதியிடம் கொடுத்துள்ளதாக அவரது வழக்கறிஞர் விஜயராகவன் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை சிறையில் தாக்கப்பட்டது குறித்து சவுக்கு சங்கர் நீதிபதியிடம் தெரிவிக்க, அதன்மீது உரிய விசாரணை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.
What's Your Reaction?
![like](https://kumudam.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudam.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudam.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudam.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudam.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudam.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudam.com/assets/img/reactions/wow.png)