மனைவியுடன் தகராறில் விபரீதம்... மகள்களைக் கொன்ற தந்தை தற்கொலை முயற்சி!

மதுரையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து பார்ப்போம்...

Sep 27, 2024 - 20:33
மனைவியுடன் தகராறில் விபரீதம்... மகள்களைக் கொன்ற தந்தை  தற்கொலை முயற்சி!

மதுரையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து பார்ப்போம்...

மதுரை மாநகராட்சி, யாகப்பா நகர்,  பாலாஜிநகர் 3-ஆவது தெருவை சேர்ந்தவர் 35 வயது பெயிண்டர் சேதுபதி. இவருக்கு ராஜேஸ்வரி என்பவருடன் திருமணமாகி, 7வயதில் ரக்‌ஷனா, 5 வயதில் ரஷிதா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் தந்தை மீது மிகுந்த பாசத்துடன் இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே கடந்த சில மாதங்களாக தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, ராஜேஸ்வரி,  கணவரிடம் சண்டை போட்டுவிட்டு,  சில நாட்கள் உறவினர்கள் வீட்டில் சென்று தங்கியிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதன்பின்னர் வீட்டுக்கு வந்த மனைவியை அவரது விருப்பத்தின் பேரில் கம்ப்யூட்டர் கிளாஸிலும் சேதுபதி சேர்த்து விட்டுள்ளார்.

இந்த நிலையில் வியாழக்கிழமை காலை கம்ப்யூட்டர் வகுப்புக்கு சென்ற மனைவியை, அண்ணன் மகனுக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி சேதுபதி வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது குழந்தைகள் குறித்து கேட்டபோது அவர்களை கழுத்தை அறுத்துப் போட்டிருப்பதாகக் கூறி பகீர் கொடுத்த சேதுபதி, தானும் தற்கொலை செய்யப் போவதாகக் கூறி அறைக்குள் சென்றிருக்கிறார்.

ராஜேஸ்வரி குழந்தைகளை சென்று பார்த்தபோது அவர்கள் கத்தியால் குத்தியும் கம்பியால் கழுத்தை நெரிக்கப்பட்டும் கிடந்துள்ளனர். இதையடுத்து ராஜேஸ்வரின் கதறலைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். குழந்தைகளை உறவினர் ஒருவர் ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொன்று சென்றிருக்கிறார். ஆனால் அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மனைவி கணினி பயிற்சிக்கு சென்றதுமே காலையிலேயே குழந்தைகளை சேதுபதி கொலை செய்ததாகத் தெரிகிறது. தற்கொலை செய்வதாக மனைவியிடம் கூறிவிட்டு அறைக்குள் சென்றவர் சிறிய கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தூக்கில் தொங்கியுள்ளார். உறவினர்கள் அவரை மீட்ட நிலையில் ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளனர்.  சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அண்ணாநகர் காவல்துறையினர்,  குழந்தைகளின் சடலங்களைக் கைப்பற்றி  அதே ராஜாஜி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக  இரண்டு பெண் குழந்தைகளையும்  கொலை செய்துவிட்டு தந்தையும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.  சம்பவம் குறித்து சேதுபதியின் மனைவி ராஜேஸ்வரியிடம் அண்ணாநகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow