மகளை அடித்த மருமகன்.. கட்டையால் அடித்துக்கொன்ற மாமனார்.. ஆயுள் தண்டனை அளித்த விருத்தாச்சலம் கோர்ட்
மகளை அடித்து துன்புறுத்திய மருமகனை கட்டையால் அடித்து கொலை செய்த மாமனாருக்கு ஆயுள் தண்டனையும் 3000 ரூபாய் அபராதமும் விதித்து விருத்தாசலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பிரபாசந்திரன் தீர்ப்பு அளித்துள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நிதிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூமாலை மகன் ரகுபதி. அதே பகுதியை சேர்ந்த செல்வராஜன் மகள் சத்யா என்பரை கடந்த 10 ஆண்டுகள் முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். காதலிக்கும் போது இனித்த வாழ்க்கை திருமணத்திற்குப் பிறகு ரகுபதிக்கு கசந்து போனது.
வேலைக்கு செல்லாமல் ரகுபதி தினமும் குடித்துவிட்டு மனைவி சத்யாவை அடித்து சித்ரவதை செய்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் வழக்கம் போல குடித்து விட்டு வந்த ரகுபதி வீட்டில் மனைவி சத்யாவிடம் தகராறு செய்தார். மகளின் நிலைமையை பார்த்து வருத்தப்பட்ட சத்யாவின் பெற்றோர்கள் செல்வராஜனும் சுசீலாவும் மருமகனிடம் தட்டி கேட்டுள்ளனர். இதில் வாய் தகராறு முற்றி கை தகராறாக மாறியது.
மாமனாரும் மருமகனும் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். ரகுபதிக்கு போதையில் கோபம் தலை உச்சிக்கு ஏறவே, சுசீலாவையும் அவரது மனைவியையும் மாறி மாறி தாக்கினார். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் கோபப்பட்ட செல்வராஜன், தனியாக இருந்த ரகுபதியை கட்டையால் அடித்து தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ரகுபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அறிந்த ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரகுபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்
கொலை சம்பவம் குறித்து ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர் இந்த வழக்கு விருத்தாசலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி பிரபாசந்திரன் ரகுபதியை கட்டையால் அடித்து கொலை செய்த செல்வராஜனுக்கு 302 பிரிவின் படி ஆயுள் தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் 449 பிரிவின் படி ஐந்து வருடம் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
மருமகனை கட்டையால் அடித்து கொலை செய்த மாமனருக்கு ஆயுள் தண்டனை வழங்கிய சம்பவம் விருத்தாசலம் நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
What's Your Reaction?






