திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்- உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு

விபத்தில் காயமடைந்த 14 பேர் உடனடியாக மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

Sep 25, 2024 - 08:20
திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்- உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று திரும்பியவர்களின் சுற்றுலா வேன் உளுந்தூர்பேட்டையில் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆரணி அருகே உள்ள மாம்பாக்கம் வாழைப்பந்தல் பகுதியை சேர்ந்த 20 பேர் ஒரு சுற்றுலா வேனில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். பின்னர் அதே வேனில் சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர். இந்த நிலையில், இவர்கள் வந்த வேன் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டத்தூர் சென்னை-திருச்சி ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது புறத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து வாகனத்தின் முகப்பு பகுதியில் நவீன இயந்திரம் கொண்டு உடைத்து இறந்தவர்களின் உடல்களை மீட்டனர். மேலும் விபத்தில் காயமடைந்த 14 பேர் உடனடியாக மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

அங்கு காயம் அடுத்தவர்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை- திருச்சி நான்கு வழி சாலையில் நடந்த இந்த விபத்தின் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 1 மணி நேர போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அங்கு வந்த போலீசார் விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் விபத்து குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுவேதி நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow