காலையிலேயே திமுகவுக்கு ஷாக்.. அதிரடியில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத் துறை!
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று (செப்.5) காலை முதலே தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் மயிலாப்பூர், அடையார், திருவான்மியூர், அண்ணா நகர், அபிராமபுரம் உள்ளிட்ட 10 இடங்களில் உள்ள கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோன்று, திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என். நேருவின் இல்லத்திலும், அவருக்குத் தொடர்படைய இடங்களில் நான்கு வாகனங்களில் வந்த அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். தகவல் அறிந்த கே.என். நேரு உடனடியாகத் தில்லை நகர் இல்லத்திற்கு நேரில் வந்துள்ளார்.
பல்வேறு நிறுவனங்களிடம் சட்டவிரோதமாகக் கட்சி நிதி (Part Fund) கேட்டு மிரட்டி வசூல் செய்ததாக வந்த புகார்களின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெறுவதாக ஒருதரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரத்தில், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக கே.என். நேரு பணியாற்றியபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.800 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் டெண்டர் முறைகேடு தொடர்பாகவே இந்தச் சோதனை நடப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், எந்தக் குறிப்பிட்ட வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
தற்போது தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், எதிர்க்கட்சியின் முக்கிய நிர்வாகியான கே.என். நேருவின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்தி வரும் இந்த அதிரடி சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், வரும் திங்களன்று (செப்.6) சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் பதிலளிக்க உள்ளார். கடந்த 3 ஆம் தேதி சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் விஜய், திங்களன்று உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன். ஆனால் யாரும் வெளியே ஓடிவிட கூடாது என்று திமுகவை சீண்டும் வகையில் பேசினார்.
இந்த நிலையில், கே.என். நேரு இல்லத்தில் கட்சி நிதி வசூலித்தாக எந்த புகாரின் பெயரில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெறுவதாக கூறப்படும் நிலையில், முதலமைச்சர் விஜய் திமுக அமைச்சர்களின் ஊழல் புகார்கள் குறித்து ஏதேனும் முக்கிய தகவலை வெளியிட வாய்ப்புள்ளதாக பனையூர் வட்டாரம் தெரிவிக்கிறது.
What's Your Reaction?