சென்னையில் முதியோர் நல மையம்.. நான் போட்ட விதை மரமானதில் மகிழ்ச்சி..! அன்புமணி பெருமிதம்..!

Feb 25, 2024 - 17:59
Feb 25, 2024 - 18:04
சென்னையில் முதியோர் நல மையம்.. நான் போட்ட விதை மரமானதில் மகிழ்ச்சி..! அன்புமணி பெருமிதம்..!

சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த முதியோர் நல மையம், 17 ஆண்டுகளுக்கு முன் நான் விதைத்த விதையின் மூலம் இன்று முதியோரை காக்கும் மரமானதில் மகிழ்ச்சியடைவதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கிண்டி கிங் நிறுவன வளாகத்தில் ரூ.157 கோடியில் அமைக்கப்பட்ட தேசிய முதியோர் நல மையத்தை குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் இன்று (பிப்.25) நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்திருக்கிறார். மூத்த குடிமக்களின் நலனுக்காக, டெல்லி எய்ம்ஸ்சுக்கு  அடுத்தப்படியாக திறக்கப்படும்,2-வது சிறப்பு மருத்துவமனை இதுவாகும்.  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகம், சென்னை கிங்ஸ் நிறுவன வளாகம் ஆகிய இரண்டிலும் அமைக்கப்பட்டுள்ள  தேசிய முதியோர் நல மையத்திற்கான விதையை 17 ஆண்டுகளுக்கு முன் விதைத்ததும், அவற்றுக்கான நிதியை ஒதுக்கீடு செய்ததும் அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றியது தான் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி என்று அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். 

இந்தியாவில் தேசிய முதியோர் நல மையத்தை அமைக்க வேண்டும் என்பது  எனது கனவு. உலகிலேயே முதன்முறையாக மூத்த குடிமக்களின் நலனுக்காக மருத்துவ கவனிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கியது அமெரிக்கா. அதற்குப் பிறகு ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளில் இத்தகைய மருத்துவ மையங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் மூத்த குடிமக்கள் இருப்பதால் இங்கும் அத்தகைய மையத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கடந்த 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டு, 2004-ஆம் ஆண்டில் மத்திய சுகாதார அமைச்சராக  பொறுப்பேற்ற நான் இந்தியாவின் முதல் தேசிய முதியோர் நல மையம் சென்னையிலும், இரண்டாவது மையம் தில்லி எய்ம்ஸ் வளாகத்திலும் அமைக்கப்படும் என்று அறிவித்ததை அன்புமணி சுட்டிகாட்டியுள்ளார். 

இந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சி அமைக்கப்பட்ட பிறகு 2016-ஆம் ஆண்டில்  தில்லி மற்றும் சென்னையில் தேசிய முதியோர் நல மையம் அமைக்கும் திட்டத்திற்கு புத்துயிரூட்டப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  சென்னையில் 2019-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டு, கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வந்த  மருத்துவமனை, தற்போது முதியோர் நல மையமாக செயல்படவிருக்கிறது என்று அன்புமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow