கள்ளசாராய மரணங்கள்.. மதுவிலக்குத்துறை அமைச்சர் முழு பொறுப்பேற்க வேண்டும்.. அண்ணாமலை வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் ஆறாக ஓடும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் திறனில்லாமல் தொடர்ந்து உயிர்கள் இழப்பிற்குப் பொறுப்பான மதுவிலக்குத் துறை அமைச்சர் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Jun 19, 2024 - 15:19
கள்ளசாராய மரணங்கள்.. மதுவிலக்குத்துறை அமைச்சர் முழு பொறுப்பேற்க வேண்டும்.. அண்ணாமலை வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி அருகே கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கருணாபுரம் பகுதியில் கண்ணுக்குட்டி என்பவர் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். அரசு மதுபானக் கடையான டாஸ்மாக்கில் மதுபானங்கள் விலை அதிகம் என்பதால், கருணாபுரம் பகுதியை ஒட்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் கள்ளச்சாராயத்தை நாடி வந்துள்ளனர். இந்நிலையில், அப்பகுதியில் சட்டவிரோத விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

கடுமையான தலைவலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில் பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் கள்ளச்சாராயம் குடித்த சுரேஷ், பிரவீன், சேகர், மகேஷ், ஜெகதீஷ் ஆகிய 5 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும், கள்ளச்சாராயம் குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாராயம் குடித்து இனி எந்த உயிரும் போகக் கூடாது என உறவினர்கள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர். 

கள்ளச்சாராய மரணங்கள் கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ள நிலையில், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். அவரது பதிவில், கள்ளக்குறிச்சியில் மீண்டும் ஐந்து பேர், கள்ளச்சாராயத்துக்குப் பலியாகியிருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. பத்து பேருக்கும் மேல், மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்கள் என்று தெரிகிறது. 

மரக்காணம், மதுராந்தகம் பகுதிகளில், கள்ளச்சாராயத்துக்கு 23 உயிர்களைப் பறிகொடுத்து ஒரு ஆண்டே ஆன நிலையில், கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த, திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெளிவாகியிருக்கிறது. 

கள்ளச்சாராய வியாபாரிகளுடன், திமுக அமைச்சர் திரு மஸ்தான் நெருங்கிய தொடர்பில் இருந்த விவரம் கடந்த ஆண்டே தெரியவந்தும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கண்துடைப்புக்காக நாடகமாடி, மீண்டும் மூன்று உயிர்களைப் பறித்திருக்கும் திமுக அரசுக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகம் முழுவதும் ஆறாக ஓடும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் திறனில்லாமல் தொடர்ந்து உயிர்கள் இழப்பிற்குப் பொறுப்பான மதுவிலக்குத் துறை அமைச்சர் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும். 

கள்ளச்சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருக்கும் அமைச்சர் திரு மஸ்தான் மற்றும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காத துறை அமைச்சர் திரு முத்துசாமி ஆகிய இருவரையும் உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார் அண்ணாமலை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow