சிக்கிய 4 கோடி என் பணம் இல்லை... சம்மனை வாங்கிய நயினார் நாகேந்திரன் பதில்... அடுத்தது என்ன?
அரசியல் சூழ்ச்சியாகவே இதை பார்க்கிறேன், ஆனால் மே 2-ம் தேதி ஆஜராவேன் - நயினார் நாகேந்திரன்
![சிக்கிய 4 கோடி என் பணம் இல்லை... சம்மனை வாங்கிய நயினார் நாகேந்திரன் பதில்... அடுத்தது என்ன?](https://kumudam.com/uploads/images/202404/image_870x_662a0065452ec.jpg)
சென்னையில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறையினர் இரண்டாவது முறையாக வழங்கியுள்ள நிலையில், அந்தப் பணத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் விளக்கமளித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வந்தனர். அப்போது, கடந்த 6ஆம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், ரூ.4 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
இதுதொடர்பாக சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேரை கைது செய்யப்பட்டு, காவல்துறையினர் விசாரித்தனர். அதில், அவர்கள் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் எனவும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதன் அடிப்படையில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு, விளக்கம் அளிக்க சம்மன் அளிக்கப்பட்டது.
கடந்த 22ஆம் தேதி தாம்பரம் காவல் நிலையத்தில் அவர் ஆஜராக உத்தரவிட்டிருந்த நிலையில், நயினார் நாகேந்திரனுக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் ஜெயிக்கர் டேவிட் ஆஜராகி 10 நாட்கள் கால அவகாசம் கேட்டு கடிதம் அளித்தார். இந்நிலையில், நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் மற்றும் முருகனின் நண்பர்கள் ஜெய்சங்கர், ஆசைத் தம்பி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது பணத்திற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் 3 பேர் பணம் எடுத்து வருவதாகவும் அவர்களின் பாதுகாப்புக்கு 2 பேரை அனுப்பும்படி நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் கேட்டுக் கொண்டதன் பேரில், ஜெய்சங்கரையும் ஆசைத்தம்பியையும் ரயில் நிலையத்திற்கு அனுப்பியதாகவும் முருகன் வாக்குமூலம் அளித்தார்.
இந்த நிலையில், ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன் வழங்கப்பட உள்ளது. நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது உதவியாளர் மணிகண்டன் ஆகிய இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என தாம்பரம் போலீசார் சம்மன் அளித்துள்ளனர். இதை கையெழுத்திட்டு நயினார் நாகேந்திரன் பெற்றுக் கொண்டார்.
அதன்பின்னர் சம்மன் குறித்து விளக்கமளித்துள்ள அவர், அந்தப் பணத்துக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார். மேலும், பறக்கும்படி ரூ.200 கோடியைக் கைப்பற்றியிருக்கிறதே அதைப் பற்றி விசாரிக்காமல் ஏன் இந்த 4 கோடி மீது மட்டும் இவ்வளவு அக்கறை காட்டுகிறார்கள் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், கைதான 3 பேரை காவல்துறையினர் மிரட்டி வாக்குமூலம் பெற்றிருக்கலாம் என்றும் கூறியுள்ளார். இதை அரசியல் சூழ்ச்சியாகவே பார்க்கிறேன் என்று குறிப்பிட்ட அவர், மே 2-ம் தேதி ஆஜராவேன் என்றும் கூறியுள்ளார்.
What's Your Reaction?
![like](https://kumudam.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudam.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudam.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudam.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudam.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudam.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudam.com/assets/img/reactions/wow.png)